இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, March 31, 2016

இஸ்லாத்தின் பார்வையில் APRIL FOOL

பொய் சாட்சி கூறல்ஏப்ரல் மாதத்தில் பிற மக்களை முட்டாளாக்க முயற்சித்துக்  கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் சிலர் அந்தப் பொய்யர்களுக்கு ஆதரவு அளித்து, உதவி செய்யும் முகமாக பொய் சாட்சி பகர்கின்றனர்.
 இதுவும் பெரும் பாவமான காரியமாகும்.
 அபூபக்ரா (ரலி) கூறியதாவது:
"பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். "ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்'' என்று நபித் தோழர்கள் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்விற்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் தான்'' என்று கூறினார்கள். சாய்ந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் பிறகு எழுந்து அமர்ந்து, "அறிந்து கொள்ளுங்கள். பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்). பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்)'' என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்கள்.
 நூல்: புகாரி 5976  முஸ்லிம் 126
ஏமாற்றுதல்
➖➖➖➖➖➖➖➖➖
இன்னும் சிலர் உண்மையுடன் பொய்யும் புரட்டும் சேர்த்துப் பேசுவார்கள்
இதற்குப் பெயர் ஏமாற்றுதல், மோசடி ஆகும்.
உதாரணமாக ஏப்ரல் மாதத்தில் ஏமாற்றுவதற்காக, விபத்து நடந்து விட்டது என்றோ, இன்னார் அபாயகரமான (சீரியஸான) நிலையில் இருக்கிறார் என்றோ, மரணித்து விட்டார் என்றோ தொலைபேசி அல்லது தந்தி மூலமாகத் தகவல் அனுப்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஏமாற்றுகின்றானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல.
நூல்கள்: முஸ்லிம் 147
திர்மிதீ 1236
மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக் கொடி ஒன்று நட்டப்படும். இது இன்னாரின் மகன் இன்னாரின் மோசடி' என்று கூறப்படும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 6178
நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:
மோசடி செய்யும் ஒவ்வொருவனுக்கும் ஒரு அடையாளக் கொடி உண்டு. அது மறுமையில் அவனது புட்டத்திடம் நட்டப்படும்.
நூல்: முஸ்லிம் 3271
முஸ்லிமின் அடுத்த அறிவிப்பில் அவனுடைய மோசடிகளுக்குத் தக்கவாறு அது உயர்த்தப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
எனவே வல்ல அல்லாஹ்வுக்குப் பயந்து ஏமாற்றுதல், மோசடி செய்தல் ஆகியவற்றிலிருந்து முழுவதுமாக விலகி உண்மையாளராக நாம் திகழ வேண்டும்.
கேலி செய்தல்
➖➖➖➖➖➖➖➖➖
 மக்களில் சிலர் சிலரை ஏப்ரல் ஃபூல் ஆக்கிய பிறகு ஏளனமாகச் சிரிப்பது, கிண்டல் செய்வது, ஆர்ப்பரிப்பது என்று எப்படியெல்லாம் அவமரியாதை செய்ய முடியுமோ அனைத்தையும் கையாளுகின்றனர்.
இந்தக் கெட்ட குணத்திற்குச் சொந்தக்காரர்கள் யார் என்றால் இறை நிராகரிப்பாளர்கள் தாம்
(ஏக இறைவனை) மறுப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப் 
பட்டுள்ளது
அவர்கள் நம்பிக்கை கொண்டோரைக் கேலி செய்கின்றனர்.
(இறைவனை) அஞ்சியோர் கியாமத் நாளில் அவர்களுக்கு மேலே இருப்பார்கள்.
அல்லாஹ், நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்.
அல்குர்ஆன் 2:212
தாராளமாக (நல் வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண் டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதவர்களையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர்.
அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
 அல்குர்ஆன் 9:79
இந்த வசனங்களில் அல்லாஹ், நயவஞ்சகர்களின் பண்பைப் பற்றிக் கூறி விட்டு அவர்களுக்குரிய தண்டனையைப் பற்றியும் கூறுகின்றான்
எனவே நாம் இந்தத் தீய பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
இழிவாகக் கருதுவது
➖➖➖➖➖➖➖➖➖
இறுதியாக ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பிறரை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்கியவர்கள் ஏன் அவர்களைப் பார்த்து, கை கொட்டி ஏளனமாகச் சிரிக்கின்றார்கள்?
ஏன் கேலி, கிண்டல் செய்து அற்ப சந்தோஷம் அடைகின்றார்கள்?
என்று சிந்தித்தால் ஓர் உண்மை விளங்கும்
அதாவது அவர்கள் தம்மைப் புத்திசாலியாகவும், உயர்ந்தவர்களாகவும் கற்பனை செய்து கொள்கின்றார்கள்
எனவே ஆணவம் தலைக்கேறிய பிறகு மற்றவர்களை, தம்மை விட அறிவில் குறைந்தவர்கள், இழிவானவர்கள் என்று முடிவு செய்வதன் காரணத்தால் தான் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தாமல், அனாவசியமாகக் கருதி, கேவலமாக நடத்தி இழிவு படுத்துகின்றனர்.
இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
பரிபூரண முஸ்லிம் யாரென்றால், எவரது நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்று இருக்கின்றார்களோ அவர் தான்.
நூல்: புகாரி 10, 6484
வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் குர்ஆன்
ஹதீஸிற்குக் கட்டுப்பட்டு உண்மை விசுவாசிகளாக வாழ அருள் புரிவானாக.
நன்றி.
இனையம்.

Sunday, March 20, 2016

ஹசன் அலி சேர் அவர்களே சற்று நில்லுங்கள்.....


பெருமதிப்புக்குரிய ஹசன் அலி சேர் அவர்களுக்கு 
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுள்ளாஹ்

நீங்கள் வளர்த்தெடுத்த பல்லாயிரம் போராளிகளின் சார்பாக அதன் அடிப்படை உரிமையுடன் சில விடயங்களை பரிமாறிக்கொள்ள நாடுகிறோம்.  
பாலமுனையில் இடம்பெற்ற மகாநாட்டில் உங்களைக் காணததையிட்டு பெரும் ஏமாற்றம் அடைந்தோம். அதையொட்டியதாக தலைவர் ஹக்கீம் அவர்களின் உரையின் சாடல்களில் ஒரு பெரும் ஊடல் உங்களுக்குள் இருப்பதாக உணர்ந்தோம். உங்களுக்குள் இருக்கின்ற மனக்கசப்புகள் பிரச்சினைகள் என்ன என்பதை நாங்கள் அறிந்திட வாய்ப்பில்லை அவைகளை நீங்களே சரிபார்த்துக்கொள்ளுங்கள் என்பது எங்களது முதல் விண்ணப்பம். 

எமது முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் இத்தனை காலம் இணைந்து செயல்பட்ட நீங்கள் மரணிப்பதும் அதனோடுதான் இருக்கவேண்டும் என்று ஆவல்கொள்கின்றோம் உங்களின் மரணத்தின் பின்னர் துரோகி என்ற பட்டம் சூட்டப்படாது  தியாகி என்று அழைத்திட நாடுகின்றோம். மறைந்த எம் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் வழியொட்டி தியாகத்தோடு செயல்பட்ட நீங்கள் பல வழிகளில் கௌரவிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை தாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் இப்போது இருக்கின்ற சுயநலக் காரணங்களை முன்வைத்து விலகிச்செல்வீர்களானால் அது மிகப்பெரும் அழியாத தழும்பாக பதிவு செய்யப்படும் என்பதில் ஐயமில்லை. எமது கட்சியின் வரலாற்றில் எத்தனை துரோகிகளை அடையாளங்கண்டிருக்கும் நீங்கள் அவர்களின் வரிசையில் நீங்களும் சேர்நதிடாதீர்கள் என வினயமாக வேண்டிநிற்கிறோம்.  

எமது தாரக மந்திரம் ஒற்றுமை அதற்குப் பங்கம் உங்கள் வாயிலாகவும் ஏற்றபடுகிறதே என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை உங்களுக்குத் தெரியும் அடிப்படைப்போராளிகளாக எம் பிரதேசங்களில் வலம் வருகின்ற அனைவரும் அதே நிலையில் வாழ்நாளைக் கழிக்கிறார்கள் .கவனம் செலுத்தப்படாத அபிவிருத்திகளாலும் கரிசனை காட்டப்படாத தொழில் வாய்ப்புகளாலும் மாற்றமில்லாத வாழ்வாதார நிலைகளோடு தின்பது பாதி தின்னாதது மீதியென தியாகிகளாகவே மாற்றங்களில்லாத வாழ்வோடு அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தில் கட்சி விட்டு கட்சி மாறி சுயநலத்தை நோக்காகக்கொண்டவன் சுகமாக வாழ்கிறான் இன்று இல்லை நாளை எம் சமுகத்திற்கு விடிவுகிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் அத்தனையையும் குழிதோண்டிப் புதைப்பது போல் உங்களைப்போன்ற எங்களது தந்தையர்களின் செயலில் இவ்வாறான மாற்றங்களைக் காணும்போது மனம் வெடித்துவிடும்போல் பதறுகிறது. 

தசாப்பதங்களைக் கடந்த போதும் உங்களது நிலைகளின் நிலமைகளைப் புரிந்துகொண்டு அழுதங்களை உங்கள் மீது செலுத்தாது எங்களது வாழ்நிலைகளை சமாளித்து வாழ்கிறோம் உங்களால் முடியாமல் போனதன் சுயநலங்கள் என்ன?? 

தற்போதய நிலையில் எங்களுக்கு எழுகின்ற சந்தேகம் என்னவெனில் பாராளுமன்றத்தின்கான பதவிகள் மறுக்கப்பட்டபோது உங்களால் கட்சில் இருக்க முடியவில்லை அதற்காகத்தான் இத்தனை காலம் இந்த மு.காங்கிரஸை ஏமாற்றி சுகபோகங்களை அனுபவித்து வந்திருக்கிறீர்களோ என எண்ணத் தோன்றுகிறது இவ்வாறான சந்தேகங்களுக்கும் அவப்பெயர்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்திடுங்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஒற்றுமையோடு கலந்தாலோசித்து காத்திரமான முன்னேற்றங்களை மக்களுக்கா மேற்கொள்ளுங்கள் அதன்பால் இறைவனிடத்திலும் உங்களக்கு உயரிய நிலை கிடைத்திடும் இறைவன் எம் அனைவரையும் ஒற்றுமையோடு வாழச்செய்திடுவானாக நன்றி வஸ்ஸலாம் 

Saturday, March 19, 2016

புதியசரித்திரமாய் பாலமுனை மகாநாடு

விழிகள் பல வியக்கின்ற 
படோபகாரப் பந்தல்களில் 
பாலமுனை மண் - பால்நிலா 
இரவுகளாய் மிளிர்கின்றது!

மார்ச் 19 என்னும் சரித்திர நாள்
பாலமுனை வரலாற்றுக்கே 
கிடைத்த பொன்னாடைத் திருநாள் 
புகழ் பெறுகின்றதின்னாள்! 

பெருந்தலைவனின் வழியில்
எம் தலைவனின் துணிவில் 
எம் பொன்னூராம் பாலமுனைக்குச்
சூடிய மகுடமாய் இந்நாள் 

எம் மண் ஈன்ற இளவல் அன்சீலின் 
சாதனைக்கொரு சவாலாய் 
அமைந்ததின்னாளை - பரிவாரங்களின்
பக்கபலங்கொண்டு சாதனையாக்கி 
வெற்றியாளனாய் வீற்றிருக்கிறான் 

சீறிய சில குரல்களையும் 
சிணுங்கிய சில மனங்களையும் 
செல்லாக் காசுகளாக்கி 
சிலிர்த்து நிற்கிறதின்னாள் 

தலைவன் உத்தரவென்று பணிந்து 
தளபதிகளெல்லாம் தூக்கம் தொலைத்து 
உழைத்திருந்த இரவுகள் - இன்று
பகல் நிலவாய் மகிழ்ந்து மின்னுகிறது

விருந்தினர்களின் வருகைக்கு 
போராளிகளின் பெருவெள்ளம் 
தாகம் தீர்ப்பதாய் அமைந்துவிட 
தார்மீகப் பொறுப்புகள் உணர்த்தும் 
சந்தர்ப்பமாய் அமைகின்றதின்னாள்  

முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சியில் 
தசாப்தங்கள் கடந்த வரலாறு கண்டும் 
ஏக்கங்களின் கேள்விகளோடின்னும் 
ஏழைகளாய் எம் போராளிகள் 

தேன் கூடு கலைக்கும் எட்டப்பராய் 
ஒற்றுமை குலைக்கும் எம் சகாக்கள் 
ஒவ்வாமை நிகழ்வுகளை நோக்கி 
காய் நகர்த்தல்கள் செய்கிறார்கள்

என்ன சதி யார் செய்தாலும் 
சோரம் போகாத சொந்தங்கள் 
மாமனிதனின் வழியில் உள்ளவரை 
வீழாது எம் மரம் வாழும் 
இவ்வுலகின் முடிவுவரை  

எம் தலைவனை நோக்கி
இட்டுக்கட்டப்படும் அவதூறுகள் 
மலையளவு குவிந்து கிடந்தாலும்  
மாறிடா மனங்களோடின்னும்
வேங்கைகளாய்க் காத்திருக்கிறோம் 

இருப்பவர்களை அணைத்தெடுத்து 
பிரிந்து நிற்பவர்ளை சேர்த்தெடுத்து 
முஸ்லிம் என்ற ஓர் கொடி நாட்டி 
புதிய சரித்திரம் படைத்திட வேண்டும் 

கடந்தவைகளை மறந்தவைகளாக்கி 
காலத்தின் கட்டாயத்திற்கேற்ப 
கண்ணிய மார்க்கம் சொல்லும் வழியில்
ஒன்று சேருங்களேன் சகோதரர்களே 

கூடிக் கலைந்ததாய் மட்டும் இந்நாளை(19) 
அநாதையாக்கி அவமதித்திடாதீர்கள்
பாலமுனை மண் எழுதிய புதிய வரலாறாய் 
நாளைய சந்ததிக்கு விட்டுச் செல்லுங்கள்!

Thursday, March 17, 2016

புறப்படுங்கள் போராளிகளே.....




கைநழுவும் எம் தருணங்கள் 
எமைத் தவித்திடச் செய்திடும் 
காரணமின்றிய வெறுப்புகள் - எமக்கு 
இழந்தவைகளை உணர்த்திடும் 

வகுக்கப்படும் வியூகங்களும் 
கொடுக்கப்படும் வாக்குறிதிகளும் 
நிறைவேற்றாதவனுக்குச் சுமையாகி 
ஏமாறியவன் அதன்பால் உயர்ந்து நிற்கிறான் 

எமக்குள்ள காலம் பொன்னானது 
எதற்காகவும் வெறுத்திட முடியாதது 
எமக்கான சோர்வுகளெல்லாம் 
எம் சந்ததிகளுக்காவது சுகங்களாகட்டும் 

எமைப் படைத்தவனுக்குத் தெரியும் 
எம் தேவை எதுவென்று 
மானிட சக்திகளுக்கப்பால் 
அவன் நாட்டத்தில் நிறைவு பெறும் 

எவர் மீதும் குறைகூறி 
எம் ஒற்றுமைக்கு உலைவைத்து 
பார்வையாளர்களுக்கு பஞ்சாமிர்தமாய் 
எம் சமுகத்தை இரையாக்கிடாதீர்கள் 

அபிவிருத்தி மாயைக்கும் 
சுயநலத்தின் போதைக்கும் 
அப்பாற்பட்டதெம் சமுகமென
மீண்டும் ஒரு முறை நிரூபித்திட 
தயாராகுங்கள் தோழர்களே....

வீணர்களின் வியாபாரம் 
விலைகளற்ற பதறுகளென 
நாம் கூறும் அல்லாஹூ அக்பரில் 
நாசமாகிடணும் - இன்றே
புறப்படுங்கள் போராளிகளே....

ஜனசமுத்திரமாய் எம் ஒன்றுகூடல் 
ஆற்றாமைகளை அகற்றிடும் 
எதிர்கால நிகள்வுகளின் 
ஏடுகளாய் பதிவேற்றப்படும் 
நீங்களும் அதிலொரு அங்கமாகிட 
புறப்படுங்கள் பாலமுனை நோக்கி



கருத்து வேறுபாடென்னும் 
கறையான்கள் வந்துங்கள் 
புரிந்துணர்வை சீரழிக்கும்!மிகவும் 
புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள் 

என்னும் மறைந்த எம் தலைவர் அஷ்ரஃபின் வரிகளுக்கொற்ப கருத்து வேறுபாடுகளை தூர வைத்துவிட்டு எம் சமுகத்தின் ஒற்றுமைக்காகவும் எதிர்கால சந்ததயினரின் வாழ்வுக்காகவும் எதிர்வரும் 19ம் திகதி பாலமுனையில் நடைபெற இருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 19வது மகாநாட்டுக்காக அனைத்து தரப்பினர்களையும் வருக வருகவென பாலமுனை மண் சார்பாக மனமகிழ்வுடன் வரவேற்கிறோம் 

Wednesday, March 16, 2016

“நான் முதல்வனானால்”

படைத்தவனைத் தொழுதெழுந்து 
பெற்றவர்களை ஆரத்தழுவி 
போற்றும் உலகொன்று காண
புதுமைப் புரட்சிக்காய் உழைத்திடுவேன் 

சட்டங்களைச் சீர்செய்து 
குற்றங்களை ஒழித்திடுவேன் 
பேதங்களை மறக்கச்செய்து 
மனிதர்களென உணர்த்திடுவேன் 

துறைசார்  அபிவிருத்தியென்று 
நாட்டையே செழிப்புறச்செய்து  
சூழல் குற்றவாளிக்குத் தண்டனை தந்து 
சுற்றத்தின் சுகந்தம் காத்திடுவேன் 

வேலையற்ற  நிலைமாற்ற 
தொழிற்சாலைப் பேட்டைகளமைப்பேன் 
பிறக்கும் குழந்தையானாலும் 
அழு குரலுக்கும் சம்பளம் தருவேன் 

உலகம் சிறக்கும் கல்விதந்து 
நாடு துறக்கும் நிலை மாற்றுவேன் 
சுதந்திரம் அனைத்திலும் தந்து 
தேசப் பற்றாளர்களை உருவாக்குவேன் 

அமைச்சர்களை மக்களுக்காய் அமைத்து 
நேரடித்தொடர்பும் என்னுடாக்கி 
மக்களின் தேவைகளகற்றி 
மக்களுக்காய் வாழ்ந்து மடிவேன் 



"கவிதைப் பட்டறை- 2016-ஏப்ரல் கவிதைப் போட்டி"
தலைப்பு: "நான் முதல்வரானால்"




Tuesday, March 8, 2016

மகளீர் மட்டும்.....!!!


ஓர் தாய் வயிற்றில் பிறந்த நாம்
உலகத்தாய் மடியில் தவழ்கிறோம்
எம் தாய்களின் மகிழ்வில்தான்
உலகமிது சாந்திபெறும்

பெண்கள் எம் கண்களென
பெயரளவில் மொழிந்து விட்டு
பெற்றவளையும் வதைத்திடும்
பேய்கள் வாழும் உலகமிது

படைப்பால் மென்மையானவளை
மகிழும் மலர்களாய் ஏந்திடாது
வெறுத்தொதுக்கி வேரோடழித்திடும்
வக்கிரப் புத்தியாளர்களின் உலகமிது

ஆதியும் அந்தமும் அன்னைகளிடமே
ஆணவமும் அசிங்கங்களும் களைந்து
ஆதரவும் பெண்களாலடைந்து
ஆறறிவாளர்களாய் மாறிட வேண்டும்

உணரும் உள்ளங்களாய் மாறி
மகளீரை மட்டும் மகிழச்செய்து
வாழ்வளித்து வாழ்வார்களானால்
வாழும் இவ்வுலகம் வசந்தமாகிடும்

Wednesday, March 2, 2016

முதிர்கன்னி என்தவறா.....????


வயதிங்கு உரமாகி 
உணர்விங்கு உயிராகி 
அடங்கிய ஆசைகள் 
அனலாய் எரிக்கிறது 

ஏந்தி நின்ற ஏழ்மையில் 
சீர்வரிசைச் சாசனங்களால் 
சிற்பமாய் இன்னும் 
சிறை வைக்கப்பட்டிருக்கிறேன் 

முனைந்திடாக் காதலும் 
முடிந்திடா மணவாழ்வும் 
முதிர்க்கன்னி எனையாக்கி 
ஒப்படைத்திருக்கிறது முதுமையை 

கனிந்திடா என் கற்பு
உதிர்ந்திடும் காலமாகியும் 
ஒடிந்து கிடக்கின்றேன் 
ஒவ்வாமை நிகழ்வுகளோடு 

குமுறச் செய்த என்சமுகம் 
குற்ற உணர்வு ஏதுமின்றி 
குலப்பெருமை பேசுகிறது 
இக்குறை நிவர்த்திக்க மறந்து 




Related Posts Plugin for WordPress, Blogger...