எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த 26ம் திகதி பாலமுனை மண்ணில் பல்கலைக் கழக வெற்றியாளர்களாக மகுடம் சூடிய பட்டதாரிகளுக்கான பாராட்டு விழா ஒன்றினை ஏற்பாடு செய்து சிறப்புற நடாத்தி முடித்த அல் அறபா விளையாட்டுக்கழகத்திற்கு முதற்கண் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அந்த நிகழ்வில் புகழப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுக்கொண்ட அனைத்து வெற்றியாளர்களுக்கும் மென்மேலும் வாழ்வில் பல வெற்றிகளடைந்து மகிழ்ந்திட வாழ்த்துகிறோம்.
பெருந்திரளான மக்கள் மன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நடந்தேறியிருக்கின்ற ஒரு அசம்பாவிதத்திற்கு விளக்கம் கோருவதாகவே இந்த கருத்தாடல் அமைந்திருக்கிறது என்பதை முதற்கண் தெரிவித்துக்கொள்கின்றோம்
அனைத்து அரசியல் வாதிகளையும் அரியணை ஏற்றி வாழவைத்து அழகு பார்த்த ஒரு எடுத்துக்காட்டான கிராமம் என்றால் அது பாலமுனை என்பதை அனைவரும் ஒரு சேர ஏற்றுக்கொள்வார்கள். அந்த அளவுக்கு மதிப்பினை மக்கள் கடந்த காலங்களில் வழங்கி வந்திருக்கிறார்கள் என்பது வரலாற்றுச் சான்றாகும்.
இந்த விழாவுக்காக முதலமைச்சரின் ஏமாற்றுச் சரிதை எங்களனைவரையும் ஏமாறச் செய்திருக்கிறது என்பதை தெரிவித்து கொள்ள முனைகிறோம். முதலமைச்சரிடம் உறுதியாக அவகாசம் பெற்ற பின்னரே விழாவினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் இருந்த போதிலும் அவர் அவ்விழாவுக்கு வருகை தராமல் அனைத்து மக்களையும் ஏமாற்றியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எவ்வாறான பிரச்சினைகள் இருந்திருந்தாலும் அதனை சுமுகமாக தீர்த்து வைத்து அவ்விழாவுக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அவர்கள் வருகை தந்து சிறப்பித்திருப்பார்களானால் அதுவே அங்கு பாராட்டுப்பெற்றவர்களுக்கும் கூடியிருந்த மக்களுக்கும் கௌரவமளிப்பதாக அமைந்திருக்கும் என்பதை ஏன் உணர மறுத்திருக்கிறார்களென்பது கேள்விக்குறியாகும்
அதற்கான காரணத்தினை ஆராயுமிடத்து அட்டாளைச் சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினரது பெயர் அழைப்பு அட்டையில் உள்வாங்கப்படாமையின் காரணமாக அவரது பிடிவாதத்தில் அவரது சொல் கேட்டு முதலமைச்சரும் பாலமுனை மக்களை ஏமாற்றியிருக்கிறார் என்று தகவலறிந்து வேதனை அடைகிறோம்.
எங்களது பிரதேசத்து மாகாண சபை உறுப்பினரைப் பொறுத்தவரை எங்களது அவசியம் என்ன என்பதை அவர் நன்றாக அறிந்தவர் இந்த விழாவினை ஒரு அரசியல் நோக்காக கொள்ளாது ஒரு கல்வி சார் பொது நிகழ்வாக கருதி அதில் எந்த ஒரு அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தாலும் தனது வீட்டு நிகழ்வாக நோக்கி தன்னை அழைத்திரா விட்டாலும் அங்கு சென்று அவரது பிரசன்னமிருந்திருந்தால் ஒரு படி மேல் மக்களின் மனங்களை வென்றிருப்பார் என்பது நிச்சயம். அதை விடுத்து எனது பெயர் உள்வாங்கப்படாமல் அழைப்பிதழ் கொடுத்து முதலமைச்சரை அழைத்து விழா நடாத்துவதா என்று சவாலிட்டு சாதித்திருப்பது வருந்தத் தக்க விடயமாக பார்க்கிறோம்
இவைகளை ஒரு சமரச நிலைக்கு கொண்டு வந்து அனைத்து சாராரையும் ஒருமைப்படுத்தாத முதலமைச்சரின் செயலையும் வெகுவாக விமர்சனத்துக்குள்ளாக்குகின்றோம்
அழைப்பிதழ் எத்தனை பக்கங்களானாலும் பறவாயில்லை எம் பிரதேசத்து அனைத்து அரசியல் வாதிகளின் பெயர்களையும் உள்வாங்கி அவர்களை கௌரவப்படுத்தி அவர்கள் மனங்களுக்கும் மகிழ்வு கொடுத்திருக்காலாமே என்று அறபா விளையாட்டுக் கழகத்தினை கடிந்து கொள்கின்றோம்
வெகு சிறப்பாக நடந்தேற வேண்டிய இவ்விழா ஈற்றில் விமர்சனங்களால் வகைசெய்யப்பட்டு அனைவரது மனங்களுக்கும் சலசலப்பினை தோற்றுவித்திருக்கிறது எதிர்வரும் காலங்களில் இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்துமாறு அனைத்து தரப்பினரையும் வேண்டிநிற்கிறோம்.
மக்களின் சேவகர்கள் மக்களின் மன்றில் மன்னர்களாகத்தான் வீற்றிருக்க வேண்டும் சுயநலம் கருதி மக்களின் மனங்களைக் காயப்படுத்தினால் ஆறிடா வடுக்களாக மாறிடும் ஒரு நாள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
கடந்த பல தசாப்தங்களாக ஏமாற்றங்களால் அலங்கரிக்கப்படும் எங்களது வாழ்வுக்கு இது ஒன்றும் புதிதல்ல விண்ணைத் தொடும் வெற்றிகளடைந்தும் இன்னும் ஏமாற்றப்படுகிறோமே என்பதுதான் வருத்தமாகின்றது. நன்றி
0 comments:
Post a Comment