இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, March 21, 2017

வாழப்பிறந்த நாம்......


இல்லறவாழ்வு என்பது 
இன்பமானது என்றனர் 
இணைகள் பிரிந்திங்கு 
இன்னல்களோடு தவிக்கின்றனர் 

துறவறமான வெளிநாட்டால் 
துன்பங்களின் சுமைகளால் 
தொடர்கின்ற பிரிவுகளால் 
வேதனையான வெறுப்புகள்தான் 

காசுக்காய் சென்ற இடத்தில் 
வேசிகளாய்ப் போனவர்களும் 
வேடமிட்டு வாழ்ந்தாலும் 
பாவிகளாய் ஆனவர்களும் 
தோல்விகளோடுதான் சங்கமிக்கின்றனர் 

மதிக்கப்படாத உணர்வுகள் 
மிதிக்கப்படும் உயிர்களாகி 
நிரந்தரமான பிரிவுகளடைந்து 
நிம்மதியற்ற வாழ்வுடன் 
நிராயுதபாணியாகின்றனர் 

மாய உலகமிதுவென்று 
மாய்த்துக் கூறினாலும் 
பகட்டு உலகமொன்று 
பொய்ப்பித்துக்கொண்டிருக்கிறது 

கஞ்சி குடித்தேனும் 
கால்வயிறு நிறப்பிக் கொண்டு 
காலம் முழுதும் சேரந்தே வாழ
வாழ்க்கைப் பயணம் தொடர்ந்திடணும் 

வாழப்பிறந்த நாம் 
வாழ்விழந்து தவித்து 
வாழ்வளித்து என்னபயன் 
அடைந்த வாழ்வையாவது  
வாழ்ந்திடப் புறப்படுங்கள் 


Monday, March 20, 2017

காதலுக்காய் உயிரோடிரு


உருவமில்லா உன் காதலை
உணர்ந்திடாத உள்ளத்திற்காய்
உனை அழிப்பதேன் பெண்ணே
உலகமிது அற்பமென்றுணராயோ...

உனக்கென நீ அடைந்ததில் 
உள்ளவைகளை வளமாக்கிக்கொள்
உலவும் உயிராக நீயிருந்தால்
உணர்வில் உருவாகும் காதலுடன்
உளமாற நேசித்திடும் காதலன்
உனைச் சேர்வான் காத்திரு பெண்ணே

உண்மையும் பொய்மையும்
உலகத்து வழமை என்பேன்
உச்சம் தொடும் மெய்களுடன்
உச்சி மோர்ந்து முத்தமிட்டு
உன்னையும் அரவணைத்திட
உத்தமனாய் நீ காண்பாய்
உயர்ந்தவனாய் அடைந்து கொள்வாய்
உச்சம் தரும் இச்சை தீர்ப்பாய்
உறவுகலந்து மகிழ்ந்திருப்பாய்
உயிர்திறக்கும் வரை சேர்ந்திருப்பாய்
உத்தமியே நீ நலமாயிரு
உயிரோடு மட்டும் மீதமாயிரு......

உறுத்தல்களைக் கழைந்து
உதடுகளின் வரிகளை மறந்து
உணர்வுகளுக்கு மதிப்பளித்து நட
உலகம் வியக்கும் வாழ்வடைந்து
உன்னத சுவனம் அடைந்திடுவாய்

Tuesday, March 14, 2017

நிழலின் நிஜங்கள் - மக்கள் மன்றின் முடிவை நோக்கி


ஊடக அரசியலின் உச்சமிந்தக் காலம் என்று சொல்லும் அளவு மிகவும் தீவிரமான ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம் என்றால் அது மிகையாகாது அதற்கு வழியமைப்பது போல் இன்றய அத்தனை இளைஞர் பட்டாளமும் Facebook மூலம் மிகவிரைவான தொடர்பாடல்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் அதுவே மிகப்பெரும் சக்தியாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதும் சத்தியமே......

இற்றைக்கு பல வருடங்களின் முன்னர் இவ்வாறான நிலை இல்லாதபோது மேடைப்பேச்சுக்களில் மயங்கும் கூட்டங்களாக இருந்தது எம் சமுகம் அந்தக் காலத்து அரசியல் வெறும் முலாம் பூச்சுக்களாக இருந்தது வீரிய வசனங்களாக இருந்தது சமுகம் சார்ந்த அக்கறையான வார்த்தைகளை எமது வேதவாக்கியங்களாக ஏற்று ஒன்று பட்டு நிற்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக பயணித்திருந்தோம் ஆனால் இன்று அத்தனையும் தலைகீழாகிப் போய்க்கொண்டிருக்கிறது யாரையும் யாரும் விமர்சிக்கலாம் என்கின்ற அரசியல் நடந்தேறிக்கொண்டிருக்கிறது
ஒற்றுமை என்றால் என்ன என்று நாம் கேட்குமளவு எமது நிலை மாறிக்கொண்டிருக்கிறது இதன் முடிவு நோக்கிய பயணம் எம் அனைவரின் மீதான தலையாய கடமையாக நான் பார்க்கிறேன்

எம் சமுகத்தின் நிலை குறித்த கவலை இன்றய காலத்தில் மிகவும் மேலோங்கி நிற்கிறது எம் சமுகத்தின் தலைவர்களே மிகப்பெரும் குற்றவாளிகளாக மக்கள் மன்றில் நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எடுத்து வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது ஆதாரங்கள் முன்வைக்கப்படுகிறது எடுத்துக்காட்டல்கள் காரண காரியங்கள் நம்பும்படியாக நிருபிக்கப்படுகிறது அத்தனை விடயங்களும் எமது மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிறது இருந்தும் தலைவன் உத்தமன் என்றுதான் வாதாடிக்கொண்டிருக்கிறோம்

சில வாரங்களாக பேஸ்புக்கில் நிழலின் நிஜங்கள் என்ற தொடரொன்றை https://www.facebook.com/jabeer.raazimuhammadh/posts/10211414263047677 எழுதிக்கொண்டு வந்தார் அவரின் எழுத்தின் ஆரம்பத்தில் நானும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தேன் காரணம் என்தலைவன் மீது மிகவும் கீழ்த்தரமாக குற்றம் சாட்டுகிறார்கள்  அசிங்கப்படுத்துகிறார்கள் என்றெல்லாம் கோபப்பட்டிருந்தேன் ஒவ்வொருத்தருடைய வார்த்தைப் பிரயோகங்களையும் கண்டு மிகவும் வேதனையடைந்தேன் ஒரு சமுகத்தின் பிரதிநிதியாகிய ஒரு தலைவரைக் குறித்து இவ்வாறெல்லாம் எழுதுகிறார்களே என்று ஆதங்கம் கொண்டேன் அவர்களை கடிந்து கொண்டேன்

அந்த தொடரின் பகுதிகள் கடந்து சென்ற போது எனது மனம் பலவாறு சிந்திக்கலாயிற்று நான் கண்மூடி யாசித்திருந்த என் தலைவன் குறித்த பகுதிகள் என் மனதோடு போர்புரிய ஆரம்பித்து விட்டது இருந்தும் நான் இன்னும் அவரை நேசிக்கிறேன் உண்மைத் தலைவனாகவே கொண்டிருக்கிறேன் எதுவரை தெரியுமா
என் தலைவன் மொழியில் இங்கு விடபட்டிருக்கின்ற குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்கமான பதில் கிடைக்கும் வரை.....

எம் மக்கள் நீதிமன்றில் ஹக்கீம் என்ற முஸ்லிம்களின் தலைவனை குற்றவாளி என்று கண்டவர்களின் ஆதாரங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆனாலும் இது பற்றிய அவரின் நியாயப்படுத்தல்கள் எம் மக்கள் மன்றில் அவர் மூலம் பகிரங்கமாக  முன்வைக்க வேண்டும் அது அறிக்கைகளாகவோ அல்லது மேடைப்பேச்சுகளாகவோ இருக்கலாம் அவ்வாறில்லாது  இதை வெறுமனே விட்டுவிட்டு அமைதி காத்தால் கூட இந்த குற்றச் சாட்டுகளை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்று மக்கள் நீதிமன்றம் முடிவு எடுத்துக்கொள்ளும் என்பதையும் எச்சரிக்கையாக கூறிக்கொள்கிறேன் உண்மையான தொண்டனாக மக்கள் மன்றில் நானும் ஒரு அங்கமாதலாம் நியாயமான தீர்வு நோக்கி பயணிக்க நானும் ஆசைப்படுகிறேன்

இத்தனை காலமும் ஏதோ ஒரு வகையில் அரசியல் அதிகாரங்கள் இரந்தும் முன்னேற்றமற்ற அனாதைகளாகவே எமது வாழ்நாள் கழிந்து விட்டது கடந்து வந்த எம் பாதையை திரும்பிப் பார்க்கின்ற போது மிகவும் வேதனையுடன் ஆசுவாசப்படுகிறோம் கடந்த காலமும் நிகள்காலமும் எதிர்காலமும் ஒரு வாறு அமையுமாக இருந்தால் எம் எதிர்கால சந்ததியினருக்கு மிகப்பொரும் துரோகிகளாக நாம் இருப்போம் என்பது யாராலும் மறுக்க முடியாது  உண்மையில்  கடந்த முப்பது வருட மூத்த அரசியல் வாதிகள் இட்ட தவறுகளால் இன்று நாம் எமது முகவரிக்காக அல்லல்படுகிறோம்
இந்த நிலை எம் இன்றய இளைஞர்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது.

ஒன்று பட்ட ஒரு சமுகத்தில் ஒற்றுமையால் அத்தனையும் சாத்தியமாகும் எதிர்கால சந்ததிக்காகவேனும் அனைவரும் ஒன்றுபட்டு சாத்தியமான அரசியல் ஒன்றை இனங்காண வேண்டும் சமரசங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் தவறிழைக்காத மனிதனில்லை குற்றம் செய்யாத மானிடமில்லை திருத்தல்களும் திருந்துதல்களும் இறைவன் மீதான பயமும் நாளைய மறுமையின் விசாரணைக்கான பதில்களுக்குமாக எம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும் அற்பம் இந்த வாழ்நாளில் மரணம் எப்போது வரும் என்று யாரும் அறிந்தவரில்லை அதற்கு முன்னரான கடமைகளை சரிவர நிறைவேற்றுங்கள் நாங்களும் உங்களோடு துணைவருகிறோம் ----

எனதன்பு இளைஞனே.....


விளையாட்டோடு வீணாகும் 
வீரனே உம் விளையாட்டால் 
வாழ்வின் விளையாட்டை 
வென்று நீ காட்ட வேண்டாமா ?? 

வேலையில்லாச் சோம்பலோடு 
வேலைதேடி நீ வெந்து போகிறாய் 
வேலையொன்று உருவாக்கிட 
வழியொன்று நீ தேட வேண்டாமா??

படித்தவன் நானென்று 
படிப்புடன் பதவி தேடுகிறாய் 
நீ கற்றது உதவாக் கல்வியென்று 
உணர்ந்து கொள்ள வேண்டாமா??

உன்னைச் சுற்றி உற்றுப்பார் 
மாணிக்கங்களாய் வழிகளிருக்கிறது 
வாலிபம் என்னும் வைரமிருக்கிறது 
நம்பிக்கையை ஆயுதமாக்கி....
முனைந்து நீ முன்னேற வேண்டாமா??

வழியொன்று பிறக்குமென்று 
வழியற்றுக் காத்திருந்து 
வாழ்விழந்த ஏழையாகி 
வதைக்கப்படுகிறாய் வறியவனாய் 
சாதித்தவனாய் மாற வேண்டாமா??

கன்னியுன் பருவத்துக் காதலை
காளையென்ற மமதையுடன் 
காமத்தால் சீரழிந்து சிதைந்து போகிறாய் 
காதலை நீ வெல்ல காதலிக்க வேண்டாமா??

இன்றய முயற்சியின் பயன்பெற்ற 
நாளைய சமுகத்தலைவன் நீயாவாய் 
இன்று நீ உன்னை இளந்துவிட்டு 
நாளை உன்னை நீ தேடுவாய்.......

எனதன்பு இளைஞனே.....
மாற்றானிடம் கையேந்திய 
மடிப்பிச்சை வேண்டாமுனக்கு 
உனக்கெனப் பாதைவகுத்து 
முன்னேறத் துணிந்து நில்
முழு மதியாய் மகிழ்வாயென்றும் 

Monday, March 6, 2017

அல்லாஹ்வுக்காய் ஒன்றுபடுங்கள்


போராளியாய் பிறந்த நீ
போராளியாய் மரணிக்க வேண்டும்
புகளெதுவும் உனைச் சேராது
ஆசைப்பட்டு அழிந்திடாதே......
என்றுரைக்கும் அரசியலின்று

தலைவனின் பிழைகூறும் தொண்டனும்
தொண்டனின் குரல் நசுக்கும் தலைவனுமாகி 
வேடமுற்றோரின் கூப்பாடுகளும்
வேதம் உரைக்கும் வேதாந்திகளுமென
அனாகரீக அரசியற் காலமின்று

கூஜாத் தூக்கிகளின் பன்னீரிலும்
காக்கா மார்களின் கதையிலும்
மயங்கி மதிமறந்த மேதாவிகள்
எதிர்காலம் பற்றிய கவலையின்றி
மானம் வித்துப் பிழைப்பு நடத்துகிறார்கள்

ஒரே அல்லாஹ் ஒரே றசூலென
ஒரு கலிமாவை உரைத்த சமுகம்
சாத்தானிய அரசியலுக்காய்
சின்னாபின்னமாகிச் சிதறப்போகிறது
சீர்படுத்த முனைவாரில்லையின்று

அறையிலுள்ள அசிங்கங்கள்
அம்பலமாகி நாறிக்கொண்டிருக்கிறது
அறையினுள் துப்பரவு செய்ய
எவர் மனமும் நாடவில்லை
மரணித்துப்போன மனங்களுடைய
பிணங்களுடனா எம்பயணங்களின்று 

மாற்றும் சக்தியாய்த் தலைநிமிர்ந்து
ஒற்றுமையின் பலமென்ற பேயரெடுத்து
ஒன்று பட்டு உருமாற்றிய 
பெருமை கொண்ட சமுகம் நாம் 
புகள் மங்கி புழுதி படிகிறதின்று 

எம் சமுகத்தின் நிலைகண்டு
அழுகின்ற உள்ளங்களுக்கு
ஆறுதல்சொல்ல நாதியில்லை
செல்லும் வழிதேடியலைகிறாரகள்
கொண்டு சேர்க்க யாருமில்லையின்று 

இந்த நிலைதொடர்ந்திட்டால் 
எம் சமுகநிலை என்னவாகும் 
தோல்விகள் எமக்காகி 
அடிமைகளும் நாமாகி 
எதிர்காலம் இருளாகுமே 
சிந்திக்க மாட்டீர்களாயின்று 

அரங்கேறும் அசிங்களின் மத்தியில் 
அசையாத வீற்றிருப்புடன் 
பதவிக்கு அடிமைப்பட்டு 
பரிதாபம் உனக்கேன் தலைவா 
ஒற்றுமைப்படுத்த வழிசொல்வாயாயின்று 

நீ காட்டியது வேதமென்று 
கண்ணடைத்துக் காத்திருந்தோம் 
இன்னும் உன் மொழியில் கேட்க 
எதிர்பார்த்திருக்கிறோம் 
நிரூபணமுண்டா உன்னிடம் 
நாளைபற்றிய கவலையுடன் 
இன்னும் தொடர்கிறோமின்று 

கடந்துவிட்ட எங்கள் ஆயுள் 
வெறும் போராளியாய்த்தான். 
கண்ணீர் சிந்துகிறது 
வேண்டிநின்ற ஒற்றுமை கலைத்து 
சீண்டியெங்களைச் சிதறடித்து 
வெறுங்கையுடன் மரணிக்கச்செய்திடாதீர்கள்......

பெருமானார் காட்டிய வழியில் 
பெருவெள்ளமாய் ஒன்றுதிரள
ஆட்சியானாலும் அவமானங்களானாலும் 
ஆசைகளானாலும் சொகுசுகளானாலும் 
அனைத்தையும் திறந்து 
சமுக நலம் என்று மட்டும் நோக்கி 
அல்லாஹ்வுக்காய் ஒன்று படுங்கள் 

சலித்துப்போன மனங்கள் - இன்று 
உங்கள் சாகசங்களை ஏற்க மறுக்கிறது 
பிழைகளைத் தூக்கிவைத்துவிட்டு 
சரிகளை மட்டும் கருதி 
கோசங்களாய் வைக்கப்படுகிறது 
செவிடர்களாய் உறங்காதீர்கள் 
நாளைய வெற்றிக்காய் 
இன்றே விழித்தெழுங்கள் 
அன்றேல் வீழ்வது நிச்சயமாகிவிடும் 




Related Posts Plugin for WordPress, Blogger...