இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, December 30, 2014

ஒன்றுபட்டு உலகையாள்வோம்.....


என் மனம் சிறகடித்துப்பறந்திருந்தது
ஆயிரமாயிரம் வார்தைகள்
ஆங்காங்கே தேங்கிக் கிடந்தது
என் தலைவனின் முடிவுகளுக்காய்
அத்தனையும் காத்திருந்தது

எங்கே உங்கள் தீர்மானம்
வரலாற்றுப் பிழையாகிடுமோவென்று
உன்னிப்பாய் ஊர்ந்தவண்ணமிருந்தேன்
உளம் மகிழும் முடிவுதந்து - மனங்களில்
முடிசூடா மன்னனானாய்

அங்கொன்றும் இங்கொன்றுமாய் 
பட்சிகள் பல தன்பங்குப் பா ஓதுகின்றன
காதில் வாங்கிடாது - வேங்கையாய் 
உம்வழியில் வீறு கொண்டு நடந்திடுங்கள் 
நாளைய சரித்திரம் காத்திருக்கிறது 

எட்டப்பர் கூட்டம் எள்ளிநகையாடுகின்றனர் 
அவர்களின் மனசாட்சிக்கே நாளை 
பதில்சொல்லாமல் தவித்துநிற்பர் 
சமூகமென்னும் பெருங்கடலுடன் 
விளையாடுகின்றனர் பேரலை மறந்து 

பெருவெள்ளங் கடந்து 
மனிதவெள்ளத்தின் ஆழங்கண்டு 
ஆட்சியாளர்களின் அகமழுகிறது 
ஆழும் போதே ஆற்றும் சேவையற்று
ஆசைக்கு அடிமையாயிருந்தனரே......

MY3 என்னும் சுனாமி 
செல்லா இடங்களெல்லாம் சென்று 
வெல்லும் சூட்சிமம் அமைத்து 
நல்லோர் யாவரையும் சேர்த்து 
நாளைய நலவுக்காய் காத்திருக்கிறார்

பெருந்தலைவன் அஷ்ரஃபின் வழியில் 
உம்மோடு பயணிக்கும் நாங்கள் 
உம் சுட்டுவிரல் திசையில் 
துணிந்து நின்று உயிரும் விட 
உளமாறக் காத்திருக்கிறோம் 

நாளை தோற்றுவிட்டால்  
என்ற கேள்வியில் பயணமெதற்கு 
நாளைய தீர்ப்புக்கு அதிபதி எம் இறைவன் 
தோற்றாலும் துவண்டிடா 
துணிவுள்ள சமுகம் எம்முடையது 

நாளைய சந்ததிக்காய் 
இன்றைய முடிவில் உறுதியாகி
பெறுமதியான தீர்வுகளுக்காய் 
ஒன்றுபட்டு உலகையாள 
இன்றே புறப்படு என் தோழா.............
.

Wednesday, December 24, 2014

இன்னும் காத்திருக்கிறேன்

என் கண்ணகியவள் 
கனதூரம் சென்றுவிட்டாளோ....
காத்திருக்கிறேன் 
எதிர் பார்த்திருக்கிறேன்.

ஆக்கிவைத்துக் கோலமிட்டு 
ஆறவிட்டு பரிமாறி - எப்போதும் 
ஆசுவாசம் எங்களுக்குள் - ஆனால் 
இப்போது பலநாள் இப்படியே 
பரிதாமாய்த்தான் கழிகிறது 

இன்னுமவள் வரவில்லை 
என்னையவள் அழைக்கிறாள் 
மரணமவர் வரும்வரை - அவள் 
சென்றவழியில் காத்திருக்கிறேன்


Sunday, December 21, 2014

தாயையும் தாங்கும் தாய்

பாசமென்னும் மெத்தையிட்டு 
அரவணைத்துத் தாலாட்டியதாலா 
தாயையும் தாண்டி
மெய்மறந்து தூங்குகிறாய்??

தந்தையென்னும் உன்னதம் 
தரணியில் ஏதுமில்லை 
தாயையும் தாங்கும் தாய் - உன் 
தந்தை என்பதாலா உறங்குகிறாய்??

மகனே/ளே உலகையே உனக்காய் 
உருவாக்கிடக் காத்திருக்கிறேன்
என் உதிரமெல்லாம் மகிழ்கிறது 
கண்ணயர்ந்து தூங்கிவிடு


Saturday, December 20, 2014

என் தாகம் தீர்த்திட.....

முதுமையில் வாடிநிற்கும்
காய்த்த மரங்கள் நீங்கள் 
உங்கள் தாகம் தீர்த்து 
என்தாகம் தணிக்கிறேன் 

வீதியில் விட்ட
விழுதுகளின் தவறில் 
சாதுகள் நீங்கள். 
சலனமும் அவர்களுக்கே.....

வருவீர்களா என்னோடு 
வாழ்வளிக்கிறேன் வறுமை தீர்க்க 
பிஞ்சு உள்ளம் என் நெஞ்சில் 
தாங்குவேன் குழந்தைகளாய்.....

Wednesday, December 17, 2014

அறிவீரோ......(படம் தந்த கவிதை)


என் எழில் காணும் 
கண்கள் கொண்ட காதலால் 
என் பசுமைக்காய் 
தவமிருக்கிறார்கள்  

என்னை அரவணைத்து 
தன் மடிமீது தவளவிட்ட 
நிலமகள் மீதென் காதலை 
சமர்ப்பித்திருக்கிறேன் 

எண்ணிலடங்கா இன்பங்களுண்டு 
என்பெருமையை சொல்லியடங்காதென 
மகிழ்வோரைக் காண்கிறேன் - ஆதலால் 
தற்பெருமையும் கொள்கிறென் 

என்சிறப்பில் லயித்த வானம் 
தூரநின்று மகிழ்கின்றபோதெல்லாம்  
அவரின் ஆனந்தக் கண்ணீராய் 
மழை பொழிந்து மகிழ்விக்கிறார் 

இயற்கையாய் நாங்கள் கொண்ட 
சமநிலையை மறுக்கின்ற... 
மானிடனே எங்களுக்கெதிரியாகின்றனரே  
அறிவீரோ......????

Sunday, December 14, 2014

மறதி வேண்டும் மானிடா....!!

இறைவனின் கொடையிது 
அற்புதக் கணமிது 
மறதிக்கு மருந்து தேடி 
மாந்தர்கள் அலைவதுண்டு 

மறக்கத் தெரிந்த மனிதன் 
மகிழ்வோடிருக்கிறான் 
மனதின் காயங்களெல்லாம் 
மறப்பதாலன்றி வடு மாறுவதில்லை 

கடந்து வந்த பாதைகளில் 
கசப்புணர்வுகள் பலகோடி
நாளைய நிம்மதிக்காய் 
அவைகளை மறந்திடலே மருந்தாகிடுமே

எதிர்காலம் நோக்கிய பயணத்தில் 
திரும்பிப் பார்த்து நடந்திட முடிவதில்லை 
பாதிவழியில் தடுமாறிட 
சந்தோசவாழ்வில் தடுக்கிவீழ்வதாகிடும் 

மனிதனின் ஆற்றலறிந்த இறைவன் 
மறதி தந்து மகிழச்செய்திருக்கிறான் 
மனதின் ஆழுமையில் - மனிதர்களால்  
மறப்பதின்றி மகிழ்ந்திட முடிவதில்லை

மறப்பதுவும் மன்னிப்பதுவும் 
மகிழ்வுக்கு வித்திடும் - இன்றே 
மன்னித்து மறந்துவிடு - உன் 
வாழ்நாள்கள் உயிர்பெற்றுவிடும்  

சுவனத்துக் கரங்கள்


முதுமையிலும்  பாட்டாளியாய்
முனைப்புடன் தொழில்செய்து
முதுகெலும்பற்ற வாலிபனுக்கு
முன்மாதிரியாக்கிய கரங்கள்

இரும்பைத் தொழிலாக்கி
விரும்பிக் கறை ஏந்தி
துலங்கும் வாழ்வுதனை
வழங்கிய கைகளிவை

வறுமை தீர்க்க வயதை ஈந்து
மரணம் எய்திடினும்
யாசகத்திற்காய் கை ஏந்திடா
சுவனத்துக் கரங்களிவை

சோம்பேறி மனிதா...
பார்... இப் பார் முழுதும்
படர்ந்திட்ட இக்கரங்களால்தான்
பஞ்சங்களும் பயந்தொழிகின்றது

Wednesday, November 19, 2014

ஏழ்மை...... கவிதை 02

உள்ளத்து ஆசைகளின் 
உந்துதலின் பாதைகளால் 
உலகத்து ஏழ்மைகள் 
உருவாகிறது உத்தமர்களே....

சமுகத்து விளைவுகளில் 
சரிந்து நிற்கும் பொருளாதாரத்தில் 
சலனமுன் திருப்தியில் கண்டு 
ஏழ்மையெனும் வறுமையில் திண்டாடுகிறாய் 

ஏ..மானிடா உம் உள்ளத்து உலகத்தில் 
வரையறையென்னும் சுவரமைத்துக்கொள் 
நீ ஏழ்மையை உணராய் - உன் 
உயிர் உள்ளவரை.

Monday, November 17, 2014

ஏழ்மை.........!!!


ஏழ்மை கொண்டுணர்ந்து 
தாழ்மையுடன் துவண்டு 
ஏழனச் செம்மலாய் 
மடிந்திடாதே துணிந்து நில் 

ஏழ்மை ஆட்கொண்டால் 
சிறுமை ஆகிடுவாய் 
சீற்றம் வாழ்வில் கொண்டு 
சீரழித்திடும் உன் நிம்மதியை 


ஏழ்மையின் உச்சம் கண்டு 
அச்சத்தில் அழிந்தோருமுண்டு 
ஏழ்மையுன்னுள் எதானாலென்று 
ஆய்ந்துபார் அமைதியடைவாய் 

ஏழ்மையை ஏராக்கி 
கூர்மையை புத்தியில் கொண்டு 
வாழ்கையை உழுதுபார் 
அறுவடையின்லாபம் உனதாகும் 

Saturday, October 18, 2014

ஏமாறியது யார்...............??


பனிக்கூட்டங்களைக் கண்டு 
மழைச்சாரலென நம்பினேன் 
உறவுக் கூட்டங்களுள்ளதென்று 
சுற்றத்து உயிர்களை நம்பினேன் 

கொடுமையிலும் கொடியது கண்டேன் 
சுயநலக் காரர்களாய்க் கண்டேன் 
என்னுள்ளம் துடிதுடிக்கக் கண்டேன் 
ஏமாற்றிய நட்புகளைக் கண்டேன் 

ஏற்றமுள்ள நட்புதனைக் கொண்டேன் 
ஏனவர்கள் எரித்துவிட்டனரென்னை 
எதிர்பார்ப்பற்ற நேசத்தினைக் கொண்டேன் 
நேசத்திற்கே யாசித்திடச்செய்தனரே...

சில்லென சிதறியதென்னுள்ளம் 
சீர்செய்திடத் தொடர்கிறார் சிலர் 
கண்ணாடித்துகள்களில்  விம்பங்கள் போல் 
நிளல்களை மாத்திரம் காண்கிறேன் 

ஏமாற்றம்.....ஏமாற்றம் - இது 
எனக்கு மட்டுமான ஏமாற்றமா.........??
ஏமாறியது நானாயிருந்தால் 
ஏமாற்றியவர்களை என்ன சொல்வேன்.. 

Thursday, October 16, 2014

சீதனமற்ற ஒரு சமுகம் அமைப்போம்

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே....
அஸ்ஸலாமு அலைக்கும்
இறைவனும் அவனுடைய தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித்தந்த திருமணம் இன்று ஒரு வியாபாரமாக உருவெடுத்து எம் சமுகத்திற்கு மத்தியில் பெரும் சவாலாக மாறியிருப்பதைக் காணும் போது மனம் பெரும் வேதனை அடைகிறது.அதுபற்றி உங்களை நோக்கி சிறு அன்புக்கட்டளையை முன்வைக்க நான் எடுத்துக்கொண்ட இம் முயற்சி உங்களையும் உங்களின் மனதளவிலும் சிறு மாற்றங்களை ஏற்படுத்துமென நம்புகிறேன் 

இஸ்லாம் நடைமுறைப்படுத்திக் காட்டிய வாழ்க்கை நெறியை முற்றாக மறந்தும் மறைத்தும் மூதாயர்கள் பின்பற்றிய வழியில் சீதனம் கொடுத்தால் திருமணம் செய்கிறேன் என்ற மனப்போக்கும் அசிங்கமான வளக்கமும் பின்பற்றப்பட்டு வருகிறது.  மாஷா அல்லாஹ் இன்றய எம் சில இளைஞர்கள் இந்த முறையை மாற்றி இஸ்லாம் கற்றுத்தரும் அழகிய திருமணங்களை தங்களாலான வசதிக்கு ஏற்ப நிறைவு செய்து வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து  நிகழ்கால எதிர்கால எம் சமுகத்தை வளப்படுத்தினோமானால் நாளை எமக்காக காத்திருக்கும் உயரிய சுவனத்தினை அனைவரும் அடைந்திடலாம் 

இதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்னும் கேள்வி எமக்குள் எழுகிறது எமது வாழ்வை எமது மார்க்கம் கற்றுத்தந்த முறையில் அமைத்துக்கொண்டாலே போதமானது எம் குழந்தைகளை சிறுவயதிலிருந்தே அதற்கான பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும் மனதளவிலும் செயலளவிலும் அதிகமதிகமாக இஸ்லாத்தின் பால் வழிநாட்த்துங்கள்  என் பெண் குழந்தைக்கு சீதனம் கொடுப்பதில்லை எனவும் ஆண் குழந்தைக்கு சீதனம் வாங்குவதில்லை எனவும்  உங்களுக்குள் நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள். அத்தோடு சோம்பேறிகளாக இருந்துவிடாமல் பெண்களை மார்க்க கல்வியின் பால் ஆசையை ஏற்படுத்தி அதன் வழிகாட்டலை பின்பற்றச்செய்யுங்கள் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் அவனாக உழைத்து அவனுக்கான தேவைகளை நிறைவு செய்ய வழியமைத்துக்கொடுங்கள் இவை இரண்டும் சரிவர நிறைவு செய்யப்டுமானால் எம் சமுகத்தின் சமநிலை உறுதிப்படுத்தப்படும்.  

இன்றைய இளைஞர்கள் செயல்பட வேண்டிய தேவை மறந்து மனஇச்சைக்கு அடிபணிந்து வாழ்கிறீர்கள் நாளைய சமுதாயம் உங்களின் கைகளில் அமானிதங்களாக தரப்பட்டிருக்கிறது நேற்றய இளைஞர்களான எம் பெற்றோரின் குற்றம் எம் தலைகளில் சுமத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்  இறைவனுக்காக உங்களை நீங்கள் தயார் செய்யுங்கள் சீதனச் சந்தையில் தலைகுனிந்து நிற்காதீர்கள் உங்களின் பெற்றோர் உங்களை விலைபேசினால் அதற்கு தலைசாய்த்திடாதீர்கள் ஹறாமான செல்வத்தில் உருவாகின்ற உங்களது வாழ்க்கை நாளை நரகத்திற்கு அழைத்துச்செல்லும். தைரியமாக இதற்கெதிராக பேசக்கூடிய அளவு நீங்கள் உங்களைத் தயார் செய்யுங்கள் தயவு செய்து இது பற்றி சிந்தியுங்கள். 

எம் சமுகத் தலைவர்களே நீங்களும்  இதற்கு கடமைப்பட்டிருக்கிறீர்கள். சீதனம் கொடுக்கல் வாங்கல்களுக்கு தயவு செய்து துணை போகாதீர்கள்.
சீதனத்தில் நடாத்துகின்ற திருமணங்களை முன்னின்று நடத்தாதீர்கள். 
 ஊரின் முக்கிய பொறுப்புகள் மற்றும் பள்ளி நிருவாக சபைகள் போன்றவற்றில் இருக்கின்ற நீங்கள் இந்த சீதனத்துக்கெதிரான கோசங்களை ஆரம்பியுங்கள். நீங்கள் வாங்கியிருந்தால் திரும்பக்கொடுத்துவிடுங்கள். அதை விட்டும்  ஒதுங்கிவிடுங்கள்   மிக முக்கியமாக எம் சமுகத்தில் இருக்கின்ற ஆலிம்கள் உங்களை சரிசெய்யுங்கள் அனைவரும் உங்களை காரணம் காட்டி தப்பிக்க முனைகிறார்கள் நீங்கள் வழிகாட்டிகள் அதிகமதிகம் இதுபற்றி எமது ஜும்மாக்களில் பிரசங்கம் செய்யுங்கள் உங்களது சகாக்களை சீதனத்திலிருந்தும் வீடுவித்து நீங்களும் அதிலிருந்து நீங்கி சமுகத்திற்கு உதாரண கர்த்தாவாக இருங்கள்.  எம் ஊரைப்போன்ற சிற்றூர்களில் இவற்றை உங்களால் நடைமுறைப்படுத்தத்  தடுக்கின்ற காரணிகள் எதுவென்று  ஆராய்ந்து துடைத்தெறிங்கள் 

அனைத்து தரப்பினையும் தாண்டி எம் சமுகத்தின் பெண்களே உங்களிடமே இதனை ஒப்படைக்கிறேன். சீதனம் வாங்காது உங்களை மகர்கொடுத்து திருமணம் செய்கின்ற ஆண் வரும் வரை காத்திருங்கள். இறைவனுக்கா உங்களை அர்ப்பணியுங்கள். உங்களது மனங்களைக் கட்டுப்படுத்துங்கள் காதல் கழியாட்டங்களுக்குள் சிக்குண்டு உங்களது வாழ்வை சீரழித்திடாதீர்கள் இறைவன் அனைவரையும் சோடிகளாக படைத்திருப்பதாக வாக்குறிதி அழிக்கிறான்.  கவலை மறந்து கட்டுக்கோப்பான வாழ்வுடன் காத்திருங்கள். உங்களுக்கான உங்கள் துணை கண்ணியத்துடன் தேடிவருவார். அவருக்காக வாழ்ந்து இருவருமாக உயரிய சுவனம் அடைந்திடுங்கள் சீதனம் கொடுத்து ஆண்களை தீங்கு செய்ய நீங்கள் துணைபோகாதீர்கள் நாளைய இறைவனின் பிடி மிகப்பயங்கரமானது பயந்து கொள்ளுங்கள். 


எம் சமுகத்து அனைத்து தரப்பினரும் இதுபற்றி சிந்தித்து  எடுத்து நடப்போமானால்  நாளைய எம் சமுதாயத்தை நாம் எதிர்பார்க்கின்ற அடைவினை நோக்கி நகர்த்திட நிச்சயமாக முடியும்.  இறுதியாக எம் பெற்றோர்களிடம் வினயமாக நான் வைக்கும் வேண்டுகோள் என்னவெனில் உங்கள் குழந்தைகளுக்கான சொத்துப்பங்கீட்டில் குறை வைக்காதீர்கள் நீதமாக  நடந்து கொள்ளுங்கள் அனேகமாக பெண்களுக்கே ஆண்களின் சொத்துக்களையும் பகுந்து அளிக்கிறீர்கள் இதுவே இந்த சீதனக்கொடுமைக்கு இட்டுச்செல்கிறது இதில் எமது இஸ்லாம் கற்றுத்தரும் பங்கீட்டு விகிதத்தினை பின்பற்றுங்கள் ஆண்களுக்கான இரு பகுதியை கொடுத்தீர்களானால் அதில் அவனால் அவனுக்கு தேவையான வாழ்வை அவன் தயார்செய்து கொள்வான். அவ்வாறு நடந்தேறாத காரணத்தினால் சொத்துக்காக வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் எம் வாலிபர்கள் அவர்களது வாழ்வையே தொலைத்து அதிலிருந்து மீண்டிட முடியாத அளவு இன்னல்களுக்குள்ளாகித் தவிக்கிறார்கள். உங்களது கடமையில் நீங்கள் தவறிழைத்திடாதீர்கள் இறைவன் எம் அனைவரையும் நேர்வழிப்படுத்திட போதுமானவன். நன்றி 


கடந்த ஹஜ் பெருநாளன்று தொழுகையின் பின்னர் பிரதி செய்து வெளியிடமுடிந்தது அதிகமானவர்களின் பார்வையில் சிறப்பான பின்னோட்டத்தினையும் பெற்றேன் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 

Friday, September 19, 2014

அன்பின் சக்தியில்

என்னவளே......எனையாளப்பிறந்தவளே
முழுவதுமாய் உன் ஆட்சியில்
முழ்கித்தத்தளிக்கிறேன்
உன் நினைவின்றிய நொடிகளின்றி
இவ் உலகமும் இருளாகிறது

உன் காதலின் அடிமையாய்
உமை வலம் வருகையில்
உம் காதலின் முன்னால்
உலகமும் அற்மாய்த் தோன்றுகிறது

எம் காதலுலகத்து அரசியாய்
எம் உணர்வுகளுக்கு உயிர்தந்து
நடமாடும் பல கவிதைகளாய்ப்
பிறந்து  - எம் உலகை
ஆக்கிரமித்திருக்கிறாய்

உன் அன்பும் அரவணைப்பும் 
சக்தி கொடுக்கிறது - இன்றே
மடிந்திடினும் நான் மகிழ்ந்தே 
இறந்திடுவேன். 

Thursday, September 18, 2014

ஹைபாவுக்கான வாழ்த்து

நிஷா அக்காவின் வரிகள் 

நேசமுடன் ஹாசிமின் நேசமான செல்ல மகள் 

ஹைபாவிற்கின்று பிறந்த நாள் 
அப்பா, அம்மா, அக்கா, அத்தை, மாமா ஆசிகளும்
பரிசுகளும் கிடைத்திடும் நாள் 

மாண்புடைய செல்வமகள் தீண்டுமின்பம்  தந்திடுவாள்
பட்டுப்போன்ற பாதங்களால் எட்டிஅடி வைத்தருகில் வந்து 
கட்டி முத்தம் தந்திடுவாள் கவலையெல்லாம்  மறக்க வைப்பாள்!
மழலையவள் சிரிப்பினாலே மலைகளையும் மயக்கிடுவாள் !

முத்தான முல்லை மகளிவள் முழுமதியாய் வாழ்ந்திடணும்
வரும் காலம் இவள் கரத்தில் வளங்களையே தந்திடணும் 
நெடுங்காலம் இவள் வாழ்வு சீரோடு சிறந்திடணும் 
வாழும் காலம் முழுவதுமே வசந்தம் மட்டும் வீசிடணும்

கவலைகள் கஷ்டங்கள்  கடுகளவும் அண்டாது 
கலைமகள்கள் இவள் வாழ்வில் நல்லாட்சி செய்திடணும் 
திருமகளாய் அனைவரையும் அரவணைத்து வாழ்ந்திடணும்
மனமார வாழ்த்துகிறேன் மருமகளே! நீ வாழ்க!


என் மனதிலிருந்து 

காலத்தின் கோலமிது 
கனிவான நேரமிது 
தூரத்துத் துயர்களில் 
தூற்றிய செய்திகளுக்கெல்லாம் 
அருகாமையின் அன்பில் 
அகம் நிறைந்து மகிழ்கிறேன் 

தத்தித் தாவிக் கைபிடித்து
சுட்டிக்குறும்பும் புன்னகையும் செய்து 
ஆசையாய் ஒரு முத்தம் 
வீம்பாய் பல சேட்டையென
அத்தனையிலும் மகிழ்கிறேன் 
அகிலமிது அற்பமாகிறது 

சொற்ப காலம் இருந்தாலும் 
சொர்க்கமாய்த்தான் உணர்ந்து 
சிகரம்தொடும் மகிழ்வில் 
சிலிர்கிறதென்தேகம் 
தொடர்ந்திடப் பிரார்த்திக்கிறேன் 
தொடரும் நாளுக்காய் காத்திருக்கிறேன் 


Tuesday, September 9, 2014

கவிதைக் கொலைகள்

கவிதைகளின் துணையில் 
காதல் காவியங்களின் 
அரங்கேற்றம் நடக்கிறது 
காதலை உள்ளம் உணரும் போது 
கவிதைகளும் உயிர்பெறுகிறது 

அத்தனை கவிஞர்களும் 
காதலிப்பதால்தான் - அவர்களின் 
கவிதைகளுடன் வாழ்கிறார்கள் 
நேசிக்கப்படாத கவிதைகளால் 
மனதளவில் வஞ்சிக்கப்படுகிறார்கள் 

காதல் உணர்வுகளால் 
உருவாகின்ற கவிதைகளை 
காதலின்றிய பார்வையால் 
சிதைத்து சீரழிக்கிறார்கள் - அதனால் 
ஏங்குகிறது கவிதைகளும் கனவுகளும் 

கருவுக்குள் காதலைவைத்து 
காதலை உணர்வுக்குள் வைத்து 
உணர்வுகளால் உருவாகும் கவிதைகளை 
உயிருள்ள குழந்தைகளாய் 
யாசிக்கிறார்கள் கவிஞர்கள் 

அத்தனை கவிதைகளும் 
மொத்தமாய் ஒவ்வொரு உயிர்கள் 
வெறுப்பை ஆயுதமாக்கி 
பொறுப்பின்றிய கொலைகள் 
கவிதைக்கொலைகளாய் சாதாரணமாகிறது 

உயிர்தரும் கவிதைகள்....

கவிதைக் காதலன் நான் 
என் காதல் தேவதை நீ... 
என் உயிராகிய கவிதைக்கு 
கருப் பொருளாகிய உடலும் நீ.....

உனக்காக எழுதிய 
ஆயிரமாயிரம் கவிதைகள் 
எனைப்பார்த்து ஏளனம் செய்கிறது 
உனைப்பார்த்துப் பரிதாபங்கொள்கிறது 

என் உள்மனதின் உணர்வுகளை 
கவிதைகளாய்ச் சேர்த்து 
படைத்து வைத்திருந்தும் 
இன்னும் புசிக்கப்படாது வீணாகிறது 

காதலித்துப்பார் கவிதை வருமென்றார் அவர் 
கவிதைகொண்டு காதலித்தும்  
வெறும் கனவுகளாகிப்போனது 
என் உணர்வுகளும் ஆசைகளும் 

உனைப்படைத்தளித்த 
இறைவனைப் புகள்கிறேன் 
என் வலிகள் வேதனைகளானாலும் 
என் வார்த்தைகள் உனக்காக 
கவிதைகளாய்த்தான் படைக்கப்படும் 

இன்றய என் படைப்புகள் 
உனக்கு மட்டும் அருவருப்பாகியும்...... 
ஏனதைத் தொடர்கிறேன் தெரியுமா? 
நாளை என் மரணத்தின் பின் 
கவிதைகளாய் உயிர்வாழுமென்பதால் 

கவிதைகளை உதாசீனப்படுத்துவது 
கவிஞர்களை கொலைசெய்வதற்கு சமம்
நானும் நடைபிணமாயத்தொடர்கிறேன் 
உனைக் காதலிப்பதால்தான் 

இக்கவிதைகளுக்காய் 
எனைவிட்டு நீ பிரிந்தாலும் 
வடு தீர்க்கும் மருந்தாகி 
கவிதைகள்தான் எனை வாழவைக்கும் 
என்றும் நீ நலம்வாழ என் பிரார்த்தனைகள் 

                            

குறிப்பு : முன்பொரு நாள் மனவேதனையில் வடித்திருந்த வரிகள் பிரசுரமாகவில்லை இன்று கண்டு வரிகளின் ஆழம் என் மனதில் தைத்தது கருவில் ஒரு அர்த்தம் இருப்பதாக உணர்ந்தேன் ஆதலால் இன்று 29/11/2015 பிரசுரம் செய்கிறேன் 

Friday, September 5, 2014

விழித்தெழு என் வாலிபனே.......


என் சமூகத்து வாலிபனே
சற்றும் சலனமின்று சிந்தித்துப்பார்
உன் முதுகெலும்பிலுன்னால்
நிமிர்ந்து நிற்கமுடியுமென்று
நிருபிக்க வேண்டாமா.......நீ.

சீதனக்கொடுமையில்
சிக்குண்டு சீரழியும் எம்
சீர்குலப்பெண்களை
எம்மைவிடக் காப்பவர்
யாருமுண்டோ...........

பெண்பெற்ற தந்தையும்
பெண்களோடு பிறந்த சகாவும்
பொருள்தேடியலையும்
பரிதாபங்கண்டும்
பகல்கொள்ளையுன்னால் நியாயமா????

உனக்கென ஒருவீடமைத்து
அதிலுந்தன் துணையமர்த்தி
அகிலம்போற்ற வாழ்வுதரும்
உத்தமனாய் உனையாழ முடியாது - உன்
தாய்தந்தையை நரகத்திற்கு தயார்செய்கிறாய்

Wednesday, September 3, 2014

குடியெனும் கொடுங்கோலன்


குடிக்கிறான் குடிக்கிறான்
குடிகாரன் என்கிறார்கள்
ஏனவன் குடிக்கிறானென்று
யாரவனுக்குள் தேடியவர்கள்

என்னவளங்கு எனக்காகயில்லையென
துக்கம் மறக்கக் குடிக்கிறான்
காதலித்தவள் கைவிட்டாளென்று
காதல் துறக்கக் குடிக்கிறான்

அழிந்தது செல்வம்
அற்றது உறவெனக் குடிக்கிறான்
அச்சம் தவிர்த்திட
அகிலம் மறந்திடக் குடிக்கிறான்

இறப்புக்கும் குடிக்கிறான் 
பிறப்புக்கும் குடிக்கிறான் 
பழகிப்போனது குடியென
வீழ்ந்துவிட்டேன் குடியிலென்கிறான்

குடிகாரனாக்கிய பொறுப்பாளிக்கோ  
அடிமையாகிய பாவிக்கோ தெரியவில்லை 
குடியொரு கொடுங்கோல் அரசனென்றும் 
விசத்தில் உருவான நஞ்சென்றும்  

கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்சிசெய்து
இவனையும் ஆட்டிவைத்து
அவனையே இழந்திடவும்செய்து
ஒரு நாள் முழுவதுமாய் முடித்துவிடும் 
அசுரனென்றும் புரியவில்லை 

எனதன்பு உலகத்தவரக்ளே
குடிகாரர்களுக்கு உணரத்துங்கள்
வாழப்பிறந்த மானிடன் உனக்கு 
குடிதரும் அற்ப சுகம் தவிர்த்து
ஆயிரமாயிரம் இன்பங்கள்
உலகில் கொட்டிக்கொடுக்கிறன்றது

Tuesday, September 2, 2014

தூக்கம் தொலைந்த இரவுகள்


என்னிரு கண்களும் மூடமறுத்து 
சுழன்று புரண்டு நித்திரையின்றி 
நினைவுகளின் நிழல்களில் 
கடத்திய நாட்களின் தவிப்பை
என் தலையணை சொல்லும் 

என்னவனங்கிருக்க 
நானிங்கு தனித்திருக்க 
நான்கு சுவர்களுக்குள் 
சிறைபிடித்த இரவுகளில் 
சிற்றின்பமேனுமின்றி  
நானிருந்த தனிமை விபரிக்கும் 

துணைதேடிய உணர்வுகளுக்கு 
விலங்கிட்டு வேதனைதந்து 
யார் யாரினதோ வெற்றிக்கு 
தான் தோற்றுப்போன வாழ்வை 
என் வயதுங்களிடம் விவாதிக்கும் 

தூரத்துத் தொலை பேசிகளும் 
துயரடைந்த நிகழ்வுகளும் 
துடிதுடித்த மனதினை 
துயில் கொள்ளத் தடுத்திருந்து 
தூக்கம் தொலைந்த இரவுகளாக்கியது 

Thursday, August 28, 2014

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

தொடர் கவிதையின் தொகுப்பு ஒரே பதிவில் 
பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கு அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை

வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை


படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
நான் சேர்ந்த அனாதையில்லம்
இன்னுந்தான் மறக்கவில்லை

என்போன்ற ஓராயிரம்
ஒத்தழுத சகாக்களோடு
வெந்த மனங்களுக்காறுதலாய்
உறவுகலந்த நாட்களை
இப்பொழுதும் மறக்கவில்லை

எனக்கிருந்த தமிழார்வத்தில்
 “ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய் 
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை

என்னுள் நானுணர்நத
மாற்றங்களை மகிழ்ந்தபோதும்
சந்தேகங்களை சரிசெய்திட
சந்தர்ப்பமே இல்லாது
சஞசலமடைந்த சங்கதிகளை
சற்றேனும் மறக்கவில்லை

                                              இவள் இன்னும் தொடர்வாள்......................

நான் அறிந்திருந்திடாத
பருவம் எனை அடைந்தபோது
தாயம்மாளின் அரவணைப்பில்
தாய்ப்பாசம் உணர்ந்த
நொடிகளின்னும் மறக்கவில்லை

தோழமையின் ஆரவாரத்துடன்
அகமகிழ்ந்த பூப்பெய்துவிழவில்
வெட்கித்தலை குனிந்து
வேதனைகள் மறந்தநிலை
என் வாழ்நாளில் மறக்கவில்லை

என் ஏக்கம் தொலைத்த
என் உயிரிலும் மேலான
தாயம்மாளின் மரணம்
தரணியை இழந்ததாக
உணர்த்தியதை மறக்கவில்லை 

நடு நிசி ஓரிரவில் 
காவல்காரனின் சில்மிசத்தை
எதிர்க்கத்துணிந்த போராட்டத்தில்
அவன் மண்டையுடைத்து
பொலிஸ் நிலயம்
சென்ற நாளை மறக்கவில்லை

அபயமளித்த இல்லத்திலும்
அவலநிலையென்று
அழுதழுது வற்றிப்போன
கண்ணீருக்காய்
காத்திருந்த நாட்களை
மனமேனோ மறக்கவில்லை

என் வாழ்வின் சூரியன்
எப்போது உதயமாவானென
விடியலைத்தேடிய போது
ஒளியொன்று புலர்ந்த
நொடியினை மறக்கவில்லை


எதிர்பார்ப்பு நிறைவுற்றதா?? இவள் தொடர்வாள்.................

எதிர்பார்ப்புகளே அற்று
கடத்தியிருந்த தினங்களுக்குள்
என்பெயரிட்டொரு மடல்
எங்கிருந்தோ வந்ததென
என்கரம் கிட்டியதை மறக்கவில்லை

யாருமற்ற எனக்கு யாரெழுதியமடலோ - என்ற
ஆவலும் ஆச்சரியமும் எனையாள
அமைதியாகப்பிரித்த மடலில்
அன்பே...
உனைக்கண்டு எனைமறந்தேன்-என்
உணர்வுகளுக்குள் நீ ஊர்ந்தாய்
உனையடய வேண்டுமென
என்னுள்ளம் துடிக்குதடி - என்று மட்டும்
இருந்த வரிகளை நம்பாத என்கண்கள்
யாரென்று தேடியதை மறக்கவில்லை

விபரங்களற்று வெற்றுக் காகிதமாயிருந்த
பகுதிகளுக்குள் என்கண்களுர்ந்தும்
ஏமாற்றம் எனைக்கொல்ல
ஏக்கம் எனையாண்ட
அந்த நிமிடங்களை மறக்கவில்லை

மொட்டைக் காகிதமா - அல்லது
மூடனின் காகிதமாவென
தூக்கமும் வரமறுத்து
என்னுள் ஏனிந்த மாற்றமோ
எனவியந்து நாட்களோடு நானும்
காத்திருந்ததை மறக்கவில்லை

என்நிலை கண்ட தோழி
உன்க்குள்ளும் காதலோ..
உரியவன் யாரெடி
கனவென்ன கண்டாயடி - என்று
கிண்டல்செய்தபோதே அழைக்கப்பட்டு
நான் ஓடிய வேகம் மறக்கவில்லை

எதற்காக ஓடினாள்........????
கண்ணடைத்து இருண்டிருக்க
கட்டிலில் கிடந்த உணர்வு
முடியாமல் கண் திற்நத போது
வதனம் நோக்கிய ஒர் வட்டம் கண்டு
அதிர்ந்ததை மறக்கவில்லை

என் பார்வையில் கேள்வியறிந்த தோழி
சாந்தி பெறு சரியாகிடுமென்ற சைகையில்
என்காலின் வலியுணர்ந்து
கண்ணீர்விட்ட அந்த நாளை மறக்கவில்லை

எதிர்பார்த்திருந்த காகிதம்
காத்திருக்கிறதென்றறிந்து
கால்கள் விரைந்தபோது
நிஜங்களும் நிழலாகியதென்றறிந்து
எனைத் தேற்றியதை மறக்கவில்லை

காலமும் வைத்தியமும்
எனக்களித்த ஆறுதலோடு
எட்டுவைத்து நடக்க
எழுந்துநின்ற மாலைப்பொழுதில்
வந்துநின்ற ஆடவனைக்கண்டு
அதிர்ந்த நிமிடம் மறக்கவில்லை

மலர்ச்சென்டு கையிலேந்தி
மலர்ந்த முகத்துடன்
என்வினவல்களுக்கு விடையாய்
அவனின் மொழிச்சல்கள்
என் காதுகளுக்கு கவிதையாய்
ஒலித்ததை மறக்கவில்லை
கவிதையோடு வருவாள்........

அன்பிற்காய் கையேந்தி
அலைந்த பொழுதுகளில்
அடைந்தேன் உனையோர் திருவிழாவில்
தொடர்ந்தேன் உனையடைய
வியந்தேன் உன் சரிதையில்

அடைவது உனையென்று
உள்ளம் எனக்கிட்ட கட்டளையில்
உனக்காக ஏங்கினேன் கண்ணே
இன்ப அதிர்வுக்காய்
செய்தனன் நாடகம் - அதில்
வீழ்ந்தது நாநானேன்

எனக்காகப் பிறந்தவளே
உன் விழிகளில் ஈரமெதற்கு
பிறப்பில் அனாதையாய் நானும்
வளர்ப்பில் உயர்ந்து நிற்கிறேன்

உனக்குப்பிணி தந்து
உயிரில் கலந்திட்ட காதலுடன்
உனையேந்தினேன் அழகே
உன்னோடு மரணம்வரை
தொடர்வது திண்ணம்

வரிகளின் இனிமையிலும்
வார்த்தைகளின் உறுதியிலும்
சொக்கித் தவித்து
சொப்பனத்திற்காய் அவன்மார்பில்
சாய்ந்த நிமிடம் மறக்கவில்லை

தழுவலில் எமை மறந்து
சூழல்நிலையும் மறந்து
சுவர்க்கம் நேரில் கண்டதாய்
சுகம் கண்டபொழுது
எழுந்த சிரிப்பொலியில்
அதிர்ந்ததை மறக்கவில்லை

இன்னும் தொடர்வாள்...........

சந்திசிரித்தாற்போல்
தெரிந்துகொண்ட காதலுக்காய்
வாழ்த்தொலிகளோடு புத்திமதிகளும்
காதினில் ஒதிட்ட தோழியருக்கு
ஜாடயில் ஒப்புதலும்
பார்வையில் காதலையும்
சமர்ப்பித்ததை மறக்கவில்லை

இத்தனை இலகுவாய்
காதலில் வீழ்ந்தேனென்று
உள்ளம் உறுத்தினாலும்
காதலின் சுகத்திற்காய்
ஏங்கிடச்செய்ததை மறக்கவில்லை

ஒலித்த கைபேசியில்
மறுமுனையில் இசைத்த குரலின்
இன்பக்காதல் மொழியில்
இறுக்கமான மனதினை
வசியம்செய்த வஞ்சகனின்
அழைப்பாணை மறக்கவில்லை

அந்திமாலை கடற்கரைச்சாலை
அரவங்களற்ற ஒதுக்குப்புறத்தில்
அமர்ந்திருந்த மன்னவனோ
மலர்ந்த முகத்துடன் உச்சிமோர்ந்த
முத்தத்தோடு வரவேற்றதை மறக்கவில்லை

வானத்து நிலவும் கடலலையின் ஒலியும்
அங்காங்கே அணைத்துக்கிடந்த காதலர்களும்
சில்லென்ற தென்றலுமாய்
என் உணர்வுகளுக்குத் தீயிட்டு
காதலுணர்வில் சங்கமித்திட
துணையானதை மறக்கவில்லை

பாசமொழியும் பக்குவமான அன்பும்
கடந்தகாலத்தில் இழந்தவைகளை
மீட்டித்தந்ததாய் உணரச்செய்தது
மகிழ்வோடு (அவனை)அவதானிக்கலானேன்
என்மனம் முழுதும் அவனுக்காய்
அலைந்ததையும் மறக்கவில்லை
தொடர்வாள்...........

தொட்டுப்பார்த்தான் கட்டியணைத்தான்
என்விரல்களின் இடையே விரல்கோர்த்து
இசைமீட்டும் வீணையாய் என்னை
மயங்கிடச்செய்த காதலை அவனிடம்
ரசித்து ருசித்ததை மறக்கவில்லை

உலகம் மறந்து காதலை நினைத்து
அவன் மடியில் தலைவைத்து
இன்பலோகம் இதுதானோவென்று
என் கன்னிப்பருவம் இசைபோட்டபோது
எதிர்காலம் நோக்கிய சிந்தனையில்
சுதாகரித்து விலகியதை மறக்கவில்லை

இளமைக்குத்தீனியாய் என் இதயம்
படபடத்தாலும் என் அந்தரத்து வாழ்வை
அகத்தினுள்ளே அலசியாய்ந்து
காதலின் அடுத்தபடியை கருதிடவும்
காமத்தினுள் கட்டுண்ட கைசேதத்தை
நாடாததையும் மறக்கவில்லை

அனாதையாய் அலங்கோலமாய்
ஆரம்பித்த என்வாழ்வின் அடைவாய்
உன்னதமானதொரு வாழ்க்கையில்
இணையப்போகிறேனென்ற கற்பனையில்
இளமையின் துடிப்புக்கு இசைந்த
நிமிடங்களை மறக்கவில்லை

என்னவனாய் ஏற்றமனதுக்கு
என்னை அவன் கொய்திடுவானோ
என்ற ஏக்கம் என்னுள் எழுந்து
அவனின் வரம்பு மீறல்களை
அவதானித்து மறுத்ததை மறக்கவில்லை

ஆச்சரியம் அவனுள்ளே
ஆசுவாசம் என்னுள்ளே
காதலின் ரசனையில்
இத்தனை போராட்டமென்று
அச்சங்கொண்டகம் அழுதது - ஏனோ அவனை
இழக்க முடியாததை மறக்கவில்லை

விடைபெறமறுத்த மனமும்
இடம்தரமறுத்த நிலையும்
இருமனங்களின் இணைவாம்
திருமணம் பற்றி அசைபோடத்துடித்தது
ஏற்பானா இல்லை மறுப்பானா - என்று
தூக்கமின்றி துவண்டதை மறக்கவில்லை

தொடர்வாள்........

வாடன்முதல் தோழியர்வரை
அறிந்திருந்த என்காதலுக்கு
அறிவுரைகள் அதிகரித்தபோது
அடுத்தகணமே நிலையான
காதெலெம் காதலென்று கூற
முனைந்ததை மறக்கவில்லை

மலரின் மகரந்தத்தில் மயங்கிய வண்டாய்
என் மடிதவள்ந்த மன்னவனிடம்
“காதலிப்போம் காதலுள்ளவரை
கரம்பற்றியும் காதலிப்போம் மரணம்வரை”
என்றதில் அதிர்ந்தவன் நிமிர்ந்து
என்முகத்தினையேந்திய கரத்துடன்
கண்மணி நாளையே எம் திருமணமென்றதில்
வழிந்த ஆனந்தகண்ணீரை மறக்கவில்லை

அனாதைகளான இருவருக்கும்
ஆதரவான உறவுகளென்ற சிலருடன்
அன்னதானம் மாத்திரமளித்து
அமைதியாய் நடந்தேறியது திருணம்
பெரியவர்களின் ஆசியுடன்
மாலைசூடிய நாளதை மறக்கவில்லை

ஜாதகமும் பார்த்தில்லை
நாட்களேதும் குறித்ததில்லை
இருமனமும் ஏற்றபோது
நடந்தவைகள் நன்றாகவே நடந்தது
அவர்குறி்த்த தினமொன்றில்
தேனிலவாம் முதலிரவை நினைத்து
என்மனம் அஞ்சியதை மறக்கவில்லை

காத்துவைத்த கற்பும்
பொத்திவைத்த மொட்டும்
சொந்தக்காரனிடம் சொந்தமாய்
ஒப்படைக்கப்போகிறேனென்ற
பெருமிதத்துடன் மனமும் உடலும்
தயாரானதை மறக்கவில்லை

காதலர்களின் தனியிரவு
கதைகளுக்கெங்கே சந்தர்ப்பம்
காத்திருந்த கண்ணனவன்
சிறுஎறும்புச் சிறுவனாகி
ஊருமிடமெல்லாம் ஊர்ந்தபோது
வெம்பித் ததும்பிய கதகதப்பில்
விக்கித்துடித்ததை மறக்கவில்லை


விடிந்த இரவு விழித்த முழுமனிசியாய்
இல்லத்தரசி இனியவாழ்கையென
மகிழ்ந்த மனதுக்கு நிகழவிருப்பதை
அறிந்திடாது விண்ணில் பறந்த
பட்டாம்பூச்சியாய் சுதந்திரவானில்
சிறகடித்துப் பறந்ததை மறக்கவில்லை



 என்னதான் நடந்தது அவள் வாழ்வில்...................
தன்மானத்தின் தலைவனாய்
தலைநிமிர்ந்த கணவனாய் - என்
இன்னல்களுக்கு விடைகொடுத்து
சொந்தமாய்த் தொழிலும் சிறியதாய் மனையுமென
வாழ்வில் ஐக்கியமாகி சுவனத்தை
அனுபவித்து மகிழ்ந்ததை மறக்கவில்லை

இரவுபகல் பாகுபாடுமறந்து
இன்பலோகம் இணைந்தேயடைந்து
கழிந்த நாட்கள் 90உம் விடைபெற
பெண்மைக்கு பெருமைசேர்த்து
புகள்மிகு கருவும் எனைச்சேர்ந்து
தாய்மையானதை மறக்கவில்லை

உலகமே கணவனென்றானது
இன்பமொன்று இருக்கிறதென்று
உறவானவனைக்கண்டேன்.
என்தாயாய் அவர்மாறி எடுத்த வாந்தியை
கையிலேந்தி தலைகோதிச் சீராட்டி
அவர்மகிழ்ந்தபோது வயிற்றுக்குழந்தையும்
தனாய் வளர்ந்ததை மறக்கவில்லை

என்னவனுக்காய் காத்திருந்தமாலை
எதிர்பார்த்திராத செய்திவந்தது
சாலையில் நிகழ்ந்த விபத்தொன்றில்
சாவின் எல்லைவரை சென்றுவிட்டாரென்றனர்
இருண்டது உலகம் சுற்றியது தலை
நிதானித்துத் தடுமாறி வைத்தியசாலையடைந்தேன்
அவர்நிலைகண்டு மூச்சயானதை மறக்கவில்லை

கண்விழித்துக் கதறியழுதேன்
விதியின் விளையாட்டையும்
என்நிலையின் அவஸ்த்தையும் எண்ணி
நெஞ்சம் படபடத்து கதறல் அதிகரித்தபோது
சேர்ந்த நண்பர்ளும் சூழ்ந்த நபர்களுமாய் - ஆறுதலாய்
ஏதேதோ சொல்லக் கேட்டதை மறக்கவில்லை

பிரியாத உயிருடன் பிரிந்த கால்களும்
சிதைந்த உடல்களோடு சிதறிய சிந்தையுடன்
மூர்ச்சையற்று முனகல்களுடன்
முழுமனிதனவர் அரைமனிதனாயுள்ளாரென
வைத்தியரின் வார்த்தையில் பைத்தியமானபோது
என்னையே இழக்கத்துணிந்ததை மறக்கவில்லை

தொடர்வாள் அவள் சோகங்களுடன்
வயிற்றுச்சுமை தீருமுன்னே
மனச்சுமை அதிகரித்து
வற்றிப்போன கண்ணீரும்
வரண்டுபோன நாவுமாய்
வெறுக்கத்துணிந்த வாழ்வை
வளரும் குழந்தைக்காய்
நிர்ப்பந்த வாழ்வேந்தி நிலமகள் மடியில்
நானொரு நடைப்பிணமானதை மறக்கவில்லை

அன்னையாயிருந்த ஆருயிரை
அங்கவீனராயளித்த இறைவனை நொந்து
மீண்டும் அனாதயாய் இருண்டவாழ்வின்
வெளிச்சந்தேடி விண்ணையடைந்தும்
வெறுமையானதை மறக்கவில்லை

ஐந்துமாதம் அயராதடைந்த இன்னல்களும்
ஐயங்களும் அனலாய் எரிந்தது
கணவனை மார்பிலும்
குழந்தையை வயிற்றிலும் சுமந்து
சிசுவைமறந்து கணவனைக் காத்ததில்
பிரிந்த குழந்தையை மறக்கவில்லை

தாயின் பரிதவிப்புடன் சேயும் துடித்தது - என்
தங்கத்தின் உழைச்சலை சாதாரணமாய் கொண்டு
அன்பைக்காத்திட பாசத்தை மறந்து
உண்ணமறுத்த உணவு
விசமாய் வீழ்த்தியதென்குழந்தையை
அறிந்தபோதுதான் அழுதேனதை மறக்கவில்லை

எனக்கெனத்துணைவர என்பிள்ளை
பிறப்பானென்ற கனவும்
காலம் முழுதும் துணைவர
கணவனிருக்கிறானென்ற ஆசையும்
நிராசையாகிக் கலைந்து
தனிமையானதை மறக்கவில்லை

எத்தனைநாளழுவது எதற்காக
அழுவதென்ற வீராப்புடன்
பிரிந்தவைகளை நினைத்து
வருந்தியென்ன லாபமென்று
வருந்தினேனெனை விரைந்து
போராடத்துணிந்ததை மறக்கவில்லை

இவளது போராட்டம் தொடரும்

நிதர்சனமான நிலையினையாள
தடுமாறிய வாழ்வின் துடுப்பினைத் தேடி
வாழ்வின் ஆழம் வரை அலையநேர்ந்தது
இறந்தது குழந்தை இருப்பதும் (கணவன்)
குழந்தையாகவே உணர்நதேனதை மறக்கவில்லை

இருந்தவைகளை இழந்திருந்து
வைத்திய சேவைக்கே யாசகம் தேடும் நிலையில்
மீண்டும் துயர் மீளாத்துயராகி
வயிற்றைக்கழுவ வேலையும் தேடி
அலைந்த போது தருபவர்களும்(உடலை) கேட்டபோது
கொடுத்துப்பெற மறுத்ததென் மனம் - இருந்தும்
என்னை இழக்காததை மறக்கவில்லை

அழகையும் அறிவையும் படைத்த இறைவன்
எனோடு துயர்களையும் பிறக்கச்செய்தானேன்
என்ற கேள்விகளை எனக்குள் நான் கேட்கலானேன்
என்னைத் தாங்க முடியாமல் அழுத கணவனின்
கண்ணீரில் தினமும் நனைந்ததை
என்நெஞ்சமின்னும் மறக்கவில்லை

இளமை உனக்குண்டு கண்ணே
இனிய வாழ்வும் உனக்கு வேண்டுமடி
இன்பம் என்னால் இல்லையென்றானதால்
மறுமணத்தில் நாட்டம் கொள்ளடியென்று
பலதடவை தன்னை மாய்க்கத்துணிந்த
உத்தமனை எப்போதுமே மறக்கவில்லை

கட்டுடல் உனதெடி கசங்கிடா மலர் நீயெடி
கட்டில் சுகம் தருகிறேன் காலம் முழுதும்
என்னோடு தொடரெடி என்றெல்லாம்
கயவர் கூட்டத்தின் நச்சரிப்புகளை
என்றும் என்வழியில் எற்றபோது
இறந்திட மனம் துடித்ததை மறக்கவில்லை


உண்மைக்காதலை மனதிலும்
வைராக்கியம் கொண்ட போராட்டமுமாய்
பொழுதுகளை வழியனுப்பினாலும்
விழுமியங்கள் நழுவிடாத நிலையுடன்
என்னை நான் நிரூபித்திருப்பதை
மறதியிலும் நான் மறக்கவில்லை

தொடர்வாள் .........பல தொடர்களில்

காத்திராத காலம் கரைந்தோடியது
கணவனின் பிணியும் பழகிப்போனது
வறுமையின் பிடியும் இறுகலானது
எதிர்காலக் கேள்விகள் சுமைகளானது
நகராமல் நகரத்துடித்த நாட்களை
நகர்த்தினேனதை மறக்கவில்லை

கிடைத்த வேலைகளோடு பசியாறி
மிகுதியான நேரங்களில் தாதியாகி
கடந்த நாட்ளில் ஓர் நாளில் பேரதிர்வு
நாற்காலியில் இருந்த கணவன்
இருந்தவாறே இறந்திருந்தார்
அந்த கறுப்புநாளை மறக்கவில்லை

அயலவர் கூடிவர இறுதிவலம்
அமைதியாக நடந்தேறியது
எனக்கென இருந்த பந்தம் இறுதியானது
அவர் இருப்பதைவிட இறந்தது மேலென
என் கதுகளுக்கே கேட்குமளவு
உரைத்தார்களதை மறக்கவில்லை

விதியின் சதுரங்கமிதுவாவென்று
வானம் பார்த்து மல்லாந்திருந்த என்மனம்
அனாதையும் நான் அவஷ்த்தையும் நான்
விதவையும் நான் பாவமும் நான் என்று
கடந்தவைகளை அசைபோட்தை மறக்கவில்லை

என்துரதிஷ்டமா என்னைத்துரத்துகிறதென்று
வீட்டினுள் முடங்கிக்கிடக்கலானேன்
வீதியில் நடக்கும்போது உலகமே எனைப்பார்த்து
ஒதுங்கிப்போ... இப்பேதையை வி்ட்டு - என
நகர்வதாய் உணர்ந்தேனதை மறக்கவில்லை

கிடைத்தவற்றைக் கையிலெடுத்து
வீட்டைவிட்டு கால்போன போக்கெல்லாம்
நடக்கலானேன் என்னை மறந்து
அம்மாவென்ற அலறல் குரல்கேட்டு
திரும்பினேன் திடுக்கிடுகிறேன்
தனிமையில் தத்தளிக்கிறதோர் அனாதை
வாரியணைத்த போது தாய்மையுணர்ந்தேன்
அதை இதுநாள்வரை மறக்கவில்லை

தொடர்வாள் ................

அனாதையுடன் அனாதையொன்று சேர
ஆரத்தழுவி அணைத்தபடி அங்குமிங்கும்
அரவம் தேடினேன் யாருமில்லை
யாரது சேயோ எனக்களித்தவர் யாரோ
விடைகளற்ற கேள்விகளோடு
வீதியில் இறங்கி நடந்ததை மறக்கவில்லை

என்னைப்போல் நீயுமா வென
நோக்கினேன் மழலையை
அவளது புன்சிரிப்பில் புதையுண்டேன்
புலரும் பொழுதுகளெல்லாம்
அனாதைகளைச் சுமக்கிறதே
காலத்தின் கொடுமையிதுவா வென
வெறுத்ததென்மனம அதை மறக்கவில்லை

முடித்திட நினைத்த வாழ்வுக்கு
முகவரி தந்த குழந்தையை முத்தமிட்டு
முழுத்தாயாய் நான் மாறி
அவளையும் பார்போற்றச் செய்து
அனாதைகளற்ற உலகம் நாட
உணர்ந்தேனதை மறக்கவில்லை

ஓய்வின்றி ஓடிய கடிகார முட்கள்
பல நாட்களையும் கடத்திவிட்டன
என் குழந்தை வளர்ந்தாள் - தன்னை
தானாக வளர்த்துக்கொண்டாள்
நடந்த பாதைகளெல்லாம் வெற்றகளோடும்
வீடுதிரும்பலானாள் வியந்தேன்
உரமேற்றினேனதை மறக்கவில்லை

பட்டமரமாய் பாழடைந்த வீடாய்
ஆனதென் வாழ்க்கைக்கு ஆண்டவன்
சேர்த்த துணை மகளென்றே இருந்துவிட்டேன்
மறுவாழ்வு பற்றி நினைக்காத என்னை
மனைவியாய் ஏற்கத் துடித்தனர் பலர்
ஏமாற்றங்களைப் பயந்து
எட்டியோடியதை மறக்கவில்லை

மனிதப்பிறவியான என் மனதுக்கும்
கடிவாளமிடத்துணிந்தானொருவன்
என்தவத்தினையும் கலைக்க நாடினான்
காய்ந்து கிடந்த கரிசல்காட்டினுள்
தீயிட்ட பாவியாய் தொடர்ந்தானொருவன்
துடித்தது தேகமெல்லாம் தொடரவும்
மறுத்தது என்மனம் அதை மறக்கவில்லை


வருவாள் புது மகளாய்
திருமணவாழ்வுடன் தொடர்ந்து
இருமன மகிழ்வுடன் கலந்து
பல மனங்களின் சங்கமத்தில்
அங்கங்கள் கொள்ளும் சங்கமமே
வாழ்வின் வெற்றி என்று என்மனம்
சில தினங்களில் ஏங்கியதை மறக்கவில்லை

வாலிபத்தின் முதிர்வும்
தனிமைகளின் வெறுப்பும்
ஈர்ப்புகளை ஏந்திக்கொள்ள
வழிசெய்து வகைசெய்ததை
வார்த்தைகளில் மாத்திரம்
மறுத்திருந்ததை மறக்கவில்லை

என்நிலை உணர்நது என் கரம் பற்றிட
வந்தவர்களுள் மேன்மையானவரென
போராடிய என் மனதிற்கு ஆறுதலாய்
தொடர்ந்தவனின் தொடர்புகள்
அவனைத் திரும்பிடச்செய்ததை
காதலென்று உணர்ந்ததை மறக்கவில்லை

மறுவாழ்வும் கிடைக்கிறது - என்
திருமகளுக்கும் தந்தைவாழ்வு
உறுதியாகிறதென்ற மங்கல நிகழ்வுகள்
மகிழும் தினங்களாக எங்களின்
வாழ்க்கைக்கு வழிசெய்ததை
ஏற்றிருந்தேனதை மறக்கவில்லை

அமைதியாய் அலங்காரமின்றி
நடந்தேறிய மறுமண தினத்தில்
அனாதைகளுக்கு அன்னதானமளித்து
அவர்களின் முகத்தின் மகிழ்வுகளோடு
புதுவாழ்வை புதுப்பித்த தினமதை
புத்துணர்வாய் மகிழ்ந்தேனதை மறக்கவில்லை

நான் வெறுத்திருந்த வேதனைகள்
வேரோடு அகல்கின்றதாய்
ஆறுதல் கரங்களின் அரவணைப்பில்
ஆட்பட்டு ஆசுவாசப்படுகிறேன்
என் வாழ்விலும் மகிழ்கிறேனென
 களிப்பில் மகிழ்ந்ததை மறக்கவி்ல்லை

எத்தனை துன்பங்கள் என்னையும் தொடர
உறுதியான போராட்டங்களுடன்
தடம் புரளாத என் உயரிய நடத்தையின்
வெகுமானமாய் தாமதித்தேனும்
தரமான வாழ்வை அடைந்ததாக
உணர்ந்தேனதை மறக்கவில்லை

தேகத்தை இரைகளாக்கி இழப்புகளுக்கு
ஈடுகொடுத்திடத் துணிவோருக்கு
சாட்டையடியாய் வாழ்ந்து காட்டினேன்
துணிவின் துணைகொண்டு
வாழ்க்கையின் இமயம் தொட்டிருக்கிறேன்
என்றெல்லாம் இறுமாப்போடு
கடந்த நாட்களை இன்னும்தான் மறக்கவில்லை

தொடர்வாள்...........
அவளாகிய அவள்....................... பாகம் 15


புத்துயிர் பெற்ற 
புதுமைப்பெண்ணாய் 
புது வாழ்வின் புகழ்ச்சியோடு 
காலம் எனைவிட்டகன்று 
சென்றதை மற்க்கவில்லை 

திடமான உறுதியுடனும் 
அவசியமான தைரியத்துடனும் 
என்மகளையும் வேங்கையாய் 
வடித்தெடுத்து அழகு பார்த்தேனதை 
மறக்கவில்லை

கணவனுக்குத் துணையாய் நடந்து 
காதலின் உச்சத்திலாழ்ந்து 
மறுவாழ்வில் வெற்றியும் கண்டு 
அவலங்களேயற்ற 
அரியவாழ்வடைந்தேனதை மறக்கவில்லை 

எப்படி இருந்தாளிவள் 
எப்படி வாழந்தாளிவள் 
பெண்ணாய்ப்பிறந்து 
பெண்மையை உணர்ந்து 
வாழ்வை வாழ்ந்து காட்டிய 
சாதனைப்பெண்ணிவள் 

கூடியிருந்தோர் பேசுகிறார்கள்
என் காதுகளினூடே 
என் இதயம் தொடுகிறது வார்த்தைகள்  
என் நாடியும் தளர்கிறது 
உலகுக்கு விடைகொடென்று 
எமன் என்னை அழைக்கிறார் 


முற்றும்  

மரணப்படுக்கையில் இருந்த ஒரு பெண் தனது வாழ்வை மீட்டிப்பார்த்ததாய் கருவை அமைத்து கவிதையாக்கியிருந்தேன் கருத்துகள் எதுவாகினும் வரவேற்கிறேன் அனைவருக்கும் நன்றிகள் 




Related Posts Plugin for WordPress, Blogger...